பஞ்சாப் பந்த்- விவசாயிகள் உக்கிர போராட்டம்- 150 ரயில்கள் ரத்து- டிராக்டர்கள் பேரணி- சாலை மறியல்!
டெல்லி: விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஹரியானா மாநில எல்லையில் 35-வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பஞ்சாப் பந்த் போராட்டத்தை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் வாகனங்களை மறித்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உலகை உலுக்கிய போராட்டத்தை ஓராண்டுக்கும் மேலாக டெல்லி வீதிகளில் விவசாயிகள் முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் 800 விவசாயிகள் மரணம் அடைந்தனர்.
இந்தப் போராட்டத்தால் மத்திய பாஜக அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும், விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். அப்போது, விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையிலான சட்டம் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்தது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் விவசாயிகள் மீண்டும் டெல்லியை முற்றுகையிட முயன்றனர். ஆனால் கடந்த பிப்ர்வரி மாதம் விவசாயிகள் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கேயே விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாயி ஜகஜீத்சிங் தலோவால் கடந்த 34 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். இன்று 35-வது நாளாக இந்தப் போராட்டம் தொடருகிறது. தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் விவசாயி ஜகஜீத் சிங் தலோவாலை மருத்துவமனையில் அனுமதிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்த பின்னணியில் விவசாயி ஜகஜீத் சிங்குக்கு ஆதரவாக பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனடிப்படையில் இன்று காலை முதல் பஞ்சாப் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு (பஞ்சாப் பந்த்) போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பஞ்சாப் பந்த் போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் பல இடங்களில் டிராக்டர்கள் பேரணி நடத்தினர். சாலைகளை மறித்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர். விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் 150-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகல் ரத்து செய்யப்பட்டன. விவசாயிகளின் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் அசம்பாவிதம் நடக்காத வகையில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பஞ்சாப் மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications