ஜனவரி 4ல் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் - மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை
மத்திய அரசுடன் வரும் 4ஆம்தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்லி: ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஷாஜகான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் டெல்லிக்கு வந்து மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளனர். ஹரியானாவில் வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்களை அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 38வது நாளாக போராடி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தலைநகரில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினமான நேற்று 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்த வெப்பநிலை ஆகும்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பல விவசாயிகள் குளிரில் மரணமடைந்துள்ள நிலையிலும் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறியுள்ளனர் விவசாயிகள்.
விவசாயிகள் போராட்டத்தினால் டெல்லியின் எல்லைகளில் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் நூற்றுக்கணக்கான போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தால் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் நிலவி வருகிறது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
எனினும் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை.
இது தொடர்பாக வருகிற 4ஆம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் மத்திய அமைச்சர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக விவசாய அமைப்பு பிரதிநிதிகள் நேற்று சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசினர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக நாங்கள் எழுப்பிய பிரச்சினைகளில் வெறும் 5 சதவிகிதம் அளவுக்கே இதுவரை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாவிட்டால் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். ஹரியானாவில் வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்களை அடைப்பதற்கான தேதியை அறிவிப்போம் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஹரியானா ராஜஸ்தான் மாநில எல்லையான ஷாஜகான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லிக்கு வருவார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்துவோம் என்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் மத்திய அரசு செய்வதறியாது திகைத்து வருகிறது.