வரலாற்றில் முதல்முறையாக டெல்லிக்கு வெளியே ராணுவ தின அணிவகுப்பு -கர்நாடகாவில் அதிரடி காட்டிய வீரர்கள்
டெல்லி: இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்லியில் இல்லாமல் கர்நாடகாவில் ராணுவ தின அணிவகுப்பு இன்று கோலாகலமாக நடைபெற்றது.
பெங்களூரில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.
ராணுவ தின அணிவகுப்பு இதுவரை டெல்லியில் மட்டுமே நடைபெற்றதால் தொலைக்காட்சி மூலமாகவே பார்த்து ரசித்த கர்நாடகா மக்கள், இதை பெருந்திரளாக திரண்டு கண்டு ரசித்தார்கள்.

ராணுவத்தை கைப்பற்றிய தினம்
இந்தியாவுக்கு 1947-இல் சுதந்திரம் கிடைத்த போதிலும், 1949 வரை பல துறைகள் பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. அதன் பிறகே, அவை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு 1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி அன்று கே.எம். கரியப்பா இந்திய ராணுவ ஜெனரலாக பொறுப்பேற்றார். அதன் பிறகு, பிரிட்டிஷாரிடம் இருந்து கே.எம். கரியப்பா தலைமையின் கீழ் இந்திய ராணுவம் வந்தது. அன்று முதலாக இந்த தினம் இந்திய ராணுவ தினம் என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாற்றில் முதன்முறையாக..
இந்த ராணுவ தினத்தின் போது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறும். கிட்டத்தட்ட குடியரசு தின நிகழ்ச்சிக்கு இணையாக நடைபெறும் இந்த அணிவகுப்பை காண டெல்லியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருப்பர். 1950 முதல் இந்த ராணுவ தின அணிவகுப்பு டெல்லியில்தான் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக டெல்லியை விட்டு வெளியே கர்நாடகாவில் இந்த ராணுவ தின அணிவகுப்பு இன்று நடைபெறுகிறது.

மக்கள் ஆரவாரம்..
கர்நாடகா தலைநகர் பெங்களூரில் உள்ள மெட்ராஸ் இன்ஜினியர் குரூப் மைதானத்தில் வைத்து ராணுவ தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கண்ககான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். ராணுவத்தின் 8 படை வீரர்களின் அணிவகுப்பு, ராணுவ வீரர்களின் பைக் சாகசங்கள், நெருப்பு சாகசங்கள், பாராசூட் சாகசங்களை ஆகியவற்றை மக்கள் ஆரவாரம் செய்து ரசித்து வருகின்றனர்.

ராஜ்நாத் சிங் பங்கேற்பு
இந்த ராணுவ தின அணிவகுப்பு நிகழ்ச்சியி்ல பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பேசுகையில், "இந்திய ராணுவத்தின் திறனும், பலமும் உலக வல்லரசுகளுக்கு இணையாக வளர்ந்துள்ளது. எந்தவிதமான அச்சுறுத்தலையும் சமாளிக்கக்கூடிய வகையிலான தயார் நிலையையும், நவீன தொழில்நுட்பத்தை கையாள்வதற்காகன திறனையும் உறுதிசெய்யும் செய்யும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது" என்றார்.

வாழ்த்து தெரிவித்த மோடி
இதனிடையே, இந்திய ராணுவ தினத்தை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்த ராணுவ தினத்தில் அனைத்து ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது ராணுவத்தை எண்ணி ஒவ்வொரு இந்தியர்களும் பெருமைப்படுகின்றனர். அவர்களுக்கு மக்கள் எப்போதும் நன்றியோடு இருப்பார்கள். நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக ராணுவ வீரர்கள் எப்போதும் பெருமையுடன் நினைவுக்கூரப்படுகிறார்கள்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications