சரத் பவாருக்கு முன்பு.. கட்சித் தலைவர் பதவி ராஜினாமா என அறிவித்து வாபஸ் பெற்ற கருணாநிதி, பால்தாக்கரே!
டெல்லி: அரசியல் கட்சித் தலைவர்கள் நெருக்கடியான சூழ்நிலைகளில் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பதும் பின்னர் வாபஸ் பெறுவதும் இந்திய அரசியலில் நடந்தேறி இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக, மகாராஷ்டிரா முகமாக இருந்தவர் சரத்பவார். 1999-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். காங்கிரஸுக்கு எதிரான கட்சியாக என்சிபி உருவானாலும் பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அக்கட்சி அங்கம் வகித்தது.

இத்தனை ஆண்டுகாலம் தாக்குபிடித்த நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் சரத்பவார், நேற்று திடீரென தமது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது என்சிபி தொண்டர்களை பெரும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார், மகள் சுப்ரியா சுலே இருவருமே, சரத்பவார் தமது முடிவில் உறுதியாக இருப்பார் என்கிற கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இன்னொரு பக்கம், 2 அல்லது 3 நாளில் சரத்பவார் தனது நிலையை உறுதி செய்வார் என்கிறார் அஜித்பவார்.
இந்திய அரசியலில் இதுபோல கட்சித் தலைவர்கள் ராஜினாமா செய்து பின்னர் வாபஸ் பெற்ற நிகழ்வுகள் உண்டு. 1977-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. தேர்தல் முடிவடைந்த ஒரு மாதத்தில் அப்போதைய திமுக மூத்த தலைவர்கள் நாவலர் நெடுஞ்செழியன், மாதவன் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி கட்சி பதவிகளை ராஜினாமா செய்தனர். அப்போது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கருணாநிதி அறிவித்தார். பின்னர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் அதிமுகவுக்கு போய்விட்டனர். கருணாநிதியே திமுக தலைவராக தொடர்ந்தார்.
1993-ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட போது அக்கட்சி பெரும் பிளவை எதிர்கொண்டிருந்தது. அப்போதும் தாம் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கருணாநிதி அறிவித்தார். இந்த அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்பாக தொண்டர்கள் திரண்டு கண்ணீரும் கம்பலையுமாக வலியுறுத்தினர். பின்னர் கருணாநிதி தமது முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
சிவசேனா தலைவர் பால்தாக்கரேவும் நெருக்கடிகளின் போது இத்தகைய நிலைப்பாடு எடுத்தவர். 1970களில் இரு முறையும் 1990களின் தொடக்கத்தில் ஒருமுறையும் பால்தாக்கரே இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். பின்னர் வாபஸ் பெற்றுக் கொண்டார். இதேபோல சரத் பவாரும் தமது முடிவை திருமப் பெறுவார் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் என்சிபி தலைவர்கள், தொண்டர்கள்- அஜித் பவார் தவிர!












Click it and Unblock the Notifications