இந்தியாவிலுள்ள வெளிநாட்டினருக்கு வேக்சின் போட அனுமதி... மத்திய அரசின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்
டெல்லி: இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரும் கோவின் தளம் மூலம் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வேக்சின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்ட வேக்சின் பணிகள் பின்னர் படிப்படியாக அனைவருக்கும் விரிவு படுத்தப்பட்டன.
முதலில் வேக்சின் போடப் பலரும் தயக்கம் காட்டினாலும், பின்னர் வேக்சின் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்தது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் வேக்சின் போட்டுக் கொள்ளத் தொடங்கினர்.

வேக்சின் பணிகள்
தற்போது 18 வயதைக் கடந்த அனைத்து இந்தியர்களுக்கும் வேக்சின் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வேக்சின் போட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இருப்பினும், வேக்சின் உற்பத்தி இன்னும் முழு வீச்சில் அதிகரிக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் வேக்சின் போடும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டினர்
தற்போது 18+ இந்தியர்களுக்கு மட்டுமே வேக்சின போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் இந்தியாவில் வசித்து வரும் வெளிநாட்டினருக்கு வேக்சின் போட அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்தச் சூழலில் இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கும் தடுப்பூசி பணிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பாஸ்போர்ட்டை ஆவணமாகப் பயன்படுத்தி கோவின் தளத்தில் பதிவு செய்து கொள்வதன் மூலம் வெளிநாட்டினரும் இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும்.
Recommended Video

சுகாதாரத் துறை
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில், குறிப்பாகப் பெருநகரங்களில் வசிக்கும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு மக்களுக்குத் தடுப்பூசி போடுவது முக்கியமானது. ஏனென்றால் நகர்ப்புறங்களில் ஜனநெருக்கடி காரணமாக கொரோனா எளிதாகப் பரவும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க இந்தியாவில் வசிக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவது முக்கியம்.

காரணம்
இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் மூலம் இந்தியர்களுக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படாது என்பதையும் இது உறுதி செய்யும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications