எல்லாம் இமயமலை சாமியாரால்.. சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு நீதிமன்ற காவல்.. விஐபியும் வீட்டு சாப்பாடும் இல்ல
டெல்லி : தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள என்எஸ்சி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
என்எஸ்இ நிர்வாக இயக்குநர்-தலைமை நிர்வாக அதிகாரியாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தார்.
தனது பதவி காலத்தின் பல்வேறு முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா ஈடுபட்டதாக பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) புகார் தெரிவித்தது.

என்எஸ்இ செயல் அதிகாரி
மேலும், என்எஸ்இ-யின் குழு செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநரின் உதவியாளராகவும் ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் உரிய வழிமுறைகள் இன்றி நியமிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இமயமலையில் உள்ள மர்ம யோகி ஒருவரின் வழிகாட்டுதலின்படியே ஆனந்த் சுப்ரமணியனை அப்பதவிக்கு நியமித்ததாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்தார். இந்த விவகாரங்கள் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

ஆனந்த் சுப்ரமணியன் கைது
தனியார் நிறுவனத்துக்கு தேசிய பங்குச் சந்தையின் முக்கியத் தகவல்களைக் கசியவிட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆனந்த் சுப்ரமணியனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது.

இமயமலை சாமியார் யார்?
கைது செய்யப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணா 7 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். சிபிஐ விசாரணையின் போது இமயமலை யோகியாக சித்ரா ராமகிஷ்ணாவுக்கு இமெயில்களை அனுப்பியது அவரது ஆலோசகரான ஆனந்த் சுப்ரமணியம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. அவர் தனது முடிவுகளை சித்ரா ராமகிருஷ்ணா வாயிலாக செயல்படுத்தியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இந்நிலையில், 7 நாள் நீதிமன்ற காவல் நிறைவடைந்ததையடுத்து, காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த டெல்லிநிதிமன்றம், தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக பதிவான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணா மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications