பில்கிஸ் பானு.. 11 பேர் விடுதலை செய்யப்பட்டது தவறு.. முன்னாள் அதிகாரிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம்
டெல்லி: குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானு எனும் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 11 குற்றவாளிகளை அம்மாநில அரசு சமீபத்தில் விடுதலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விடுதலையை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் கண்டங்களை வெளிப்படுத்தினர்.
தற்போது இதன் தொடர்ச்சியாக டெல்லி முன்னாள் துணை நிலை ஆளுநர் உட்பட 130க்கும் மேற்பட்ட அரசு முன்னாள் அதிகாரிகள், "குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது பயங்கரமான தவறு" என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடந்த 2002 பிப்ரவரி 27ம் தேதி குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் கொல்லப்பட்டனர். 2005 ஆம் ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், தாக்குதல் நடைபெற்றதால் ரயில் தீ பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தது.
ஆனால் சம்பவத்தன்று, ரயில் தீப்பிடித்ததற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவ அமைப்பினர் குஜராத் முழுவதும் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடுகள் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்த தாக்குதலுக்கு இரையானவர்களில் ஒருவர்தான் பில்கிஸ் பானு. அப்போது இவருக்கு 19 வயது. ஐந்து மாத கர்ப்பிணி. இந்நிலையில் கும்பல் ஒன்று இவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இவரது கைக்குழந்தை உட்பட குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை கொன்றது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 11 பேர் சிறை தண்டனை பெற்று வந்த நிலையில், சுதந்திர தினமான கடந்த 15ம் தேதி இவர்கள் அம்மாநில அரசால் விடுவிக்கப்பட்டனர். இந்த விடுதலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இது குறித்து குஜராத் அரசை கடுமையாக விமர்சித்தனர். தற்போது இதன் தொடர்ச்சியாக 134 அரசு முன்னாள் அதிகாரிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில், "இந்த 11 பேரின் விடுதலை பயங்கரமான தவறு" என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், "நம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களைப் போலவே, சில நாட்களுக்கு முன்பு, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தில் குஜராத்தில் நடந்ததைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம்" என கூறியுள்ளனர். இந்த கடிதத்தில், தில்லியின் முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் சிவசங்கர் மேனன், சுஜாதா சிங், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்ட 134 முன்னாள் அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, "இந்த குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளது நாட்டில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பையும் கேள்வி குறியாக்கியுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாலும், இந்த கொடூரமான தவறான முடிவைத் திருத்துவதற்கான முதன்மை அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்று நாங்கள் நம்புவதாலும் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறோம்"
"நிறுவப்பட்ட சட்டத்திலிருந்து நடைபெறும் இந்த வெளிப்படையான விலகல்கள் பில்கிஸ் பானு மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இதனை கருத்தில் கொண்டு குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து 11 குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் ஆயுள் தண்டையை அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.