பாபர் மசூதி முதல் பேரறிவாளன் விடுதலை வரை! அரசியலமைப்பு பிரிவு 142ல் சாட்டையை சுழற்றிய உச்சநீதிமன்றம்
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதற்கு முன்பு இந்த சட்டப்பிரிவை பாபர்மசூதி இடிப்பு, ஐபிஎல் சூதாட்டம் உள்பட சில வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் பயன்படுத்தி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வராவ், பிஆர் கவாய், ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.

142வது சட்டப்பிரிவு
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை 2018ல் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161ன் கீழ் ஆளுநர் முடிவெடிக்காமல் கிடப்பில் போட்டதால் பேரறிவாளனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்துள்ளது.

பேரறிவாளன் வழக்கில் ஏன்?
இந்நிலையில் தான் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 என்றால் என்ன?. இதற்கு முன்பு இந்த சட்டப்பிரிவுகளை உச்சநீதிமன்றம் பயன்படுத்தி உள்ளதா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு விடையளிக்கும் வகையில் இந்த செய்தி இருக்கும். அதாவது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142 என்பது நீண்டகாலம் நிலுவையில் இருக்கும் வழக்கில் நீதி வழங்கும் சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு வழங்குகிறது. இதன்படி உச்சநீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். பேரறிவாளன் வழக்கிலும் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால் தற்போது இந்த சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தி உள்ளது.

பாபர்மசூதி இடிப்பு வழக்கில்...
இதற்கு முன்பும் பல வழக்குகளில் இந்த பிரிவை உச்சநீதிமன்றம் பயன்படுத்தி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. ராமஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் பிரச்சனைக்குரிய நிலத்தை மத்திய அரசால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு வழங்க இந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்பாக பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்கே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீதான விசாரணையை உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இருந்து லக்னோவிற்கு மாற்ற இந்த பிரிவு உபயோகப்படுத்தப்பட்டது.
Recommended Video

ஐபிஎல் சூதாட்ட வழக்கிலும்...
மேலும், போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கிய விவகாரம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் மதுக்கடைகளுக்கு தடை விதித்தது, 2013ல் ஐபிஎல் சூதாட்ட வழக்கிலும் முகுல் முத்கல் கமிட்டியும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி தான் அமைக்கப்பட்டது. இதுதவிர உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வெள்ளை பளிங்கு கல் புனரமைக்கும் விவகாரத்தில் இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications