"சர்வதேச அரசியலில் திடீர் மாற்றம்!" வீழும் வலதுசாரிகள்.. எழுச்சி பெறும் இடதுசாரிகள்! என்ன காரணம்?
டெல்லி: பிரிட்டன் தொடங்கி பிரான்ஸ் வரை, ஈரான் முதல் மெக்சிகோ வரை இப்போது பல நாடுகளில் வரிசையாக வலதுசாரிகளை மக்கள் நிராகரித்து இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகளை வெற்றி பெற வைத்து வருகின்றனர். திடீரென வலதுசாரி கட்சிகள் சரிவைச் சந்திக்க என்ன காரணம்.. இடதுசாரிகள் எழுச்சி எந்தளவுக்கு இருந்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு நாடுகளிலும் வலதுசாரிகள் வெல்லத் தொடங்கினர். ஓரிரு நாடுகளைத் தவிர பெரும்பாலான நாடுகளில் வலதுசாரிகளின் ஆட்சி அமைந்தது.

அப்போது உலகெங்கும் வலதுசாரிகளின் ஆதிக்கமே இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறுகிறது. இடதுசாரிகள் கை ஓங்குகிறது. இப்போது உலக நாடுகளில் என்ன நடக்கிறது.. இதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம்.
பிரிட்டன்: இதில் முதலில் இருப்பது பிரிட்டன்.. கடந்த வாரம் நடந்த பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் தலைமையிலான வலதுசாரி கட்சியான கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடைந்தது. இடதுசாரி கொள்கைகளைக் கொண்ட தொழிலாளர் கட்சி வரலாறு காணாத வெற்றியைப் பதிவு செய்த நிலையில், அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமரானார்.
இது பிரிட்டன் வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலைப் பார்க்கப்படுகிறது. 650 சீட்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சியால் வெறும் 121 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இது கடந்த முறை அவர்கள் பெற்ற இடங்களைக் காட்டிலும் 251 சீட்கள் குறைவாகும். குறிப்பாக வேல்ஸ் பகுதியில் ஒரு சீட்டில் கூட கன்சர்வேடிவ் கட்சி வெல்லவில்லை. பிரிட்டன் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி இந்தளவுக்கு மோசமாகத் தோல்வி அடைந்ததே இல்லை.
காரணம்: இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சி 411 இடங்களைப் பெற்று ஆட்சி பிடித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் மீண்டும் தொழிலாளர் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. தேசிய சுகாதார சர்வீஸை மறுசீரமைப்பது, புதிய ஆசிரியர்களை பணியமர்த்துதல், பள்ளிகளில் இலவச காலை உணவு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBT+ பிரிவுக்கான உரிமைகள் எனத் தொழிலாளர் கட்சி அளித்த வாக்குறுதிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிரான்ஸ்: அதேபோல பிரான்ஸ் நாட்டிலும் இடதுசாரிகள் கையே ஓங்கி உள்ளது. அங்கு அதிபராக மையவாத கொள்கை கொண்ட இமானுவேல் மாக்ரோன் உள்ள நிலையில், சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அங்கு முதல் ரவுண்டு தேர்தலில் வலதுசாரிகள் அதிக இடங்களைப் பெறும் சூழல் உருவான போதிலும், 2ஆவது சுற்றில் வலதுசாரிகள் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டனர். கடைசியாக இடதுசாரிகள் கூட்டணியே அதிக இடங்களை வென்றனர்.
577 இடங்களைக் கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் கூட்டணி 180 இடங்களில் வென்றுள்ளது. மையவாத கொள்கை கொண்ட இமானுவேல் மாக்ரோன் 159 சீட்களை பெற்றுள்ள நிலையில், வலதுசாரி கூட்டணி 142 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 289 சீட்கள் யாருக்கும் கிடைக்காததால் அங்குத் தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது.
ஈரான்: தீவிர இஸ்லாமிய நாடான ஈரான் நாட்டிலும் அதே நிலை தான். அங்குக் கடந்த 3 ஆண்டுகளாக அதிபராக அதி தீவிர பழமைவாதியான இப்ராஹிம் ரைசி இருந்தார். அவரது ஆட்சியில் தான் கலச்சார காவலர்கள் ஈரானில் மீண்டும் கொண்டு வரப்பட்டனர். கலாச்சார காவலர்களால் மஹ்ஸா அமினி என்ற இளம்பெண் கொல்லப்பட்ட நிலையில், அங்கு 2022 செப்டம்பரில் தொடங்கிப் பல மாதங்கள் போராட்டங்கள் நடந்தது. இதனால் ஈரான் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது. இதுபோல ரைசி ஆட்சியில் பல பழமைவாத கொள்கைகள் கொண்டு வரப்பட்டன.
இந்தச் சூழலில் தான் இவர் கடந்த மே மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கு அதிபர் தேர்தல் நடந்த நிலையில், சீர்திருத்தவாதியாக அறியப்படும் மசூத் பெசெஷ்கியன் பழமைவாதியான சயீத் ஜலிலி வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஈரான் நாட்டில் பல முக்கிய மாற்றங்கள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்சிகோ: அதேபோல மெக்சிகோ நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் இடதுசாரிகள் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. 61 கிளாடியா ஷீன்பாம் அங்கு அதிபராகத் தேர்வாகியுள்ளார். மெக்சிகோ நகர மேயராக இவர் இருந்துள்ளார்.. சுற்றுச்சூழல் விவகாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் இவர், வலதுசாரி வேட்பாளரை மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
'சமூக நீதி' தலைவர்..பள்ளிகளில் இலவச காலை உணவு.. பிரிட்டன் புதிய பிரதமராகும் கீர் ஸ்டார்மர்! யார் இவர்?
இந்தியா: இந்தியாவிலும் கூட வலதுசாரி சித்தாந்தத்தைக் கொண்ட பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 400 சீட் என்ற இலக்குடன் தேர்தலைச் சந்தித்த பாஜகவால் தனிப்பெரும்பான்மை கூடப் பெற முடியவில்லை. கடந்த 2 தேர்தல்களில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடித்த பாஜகவால் இந்த முறை 240 இடங்களில் மட்டுமே பெற முடிந்தது. இதையடுத்து கூட்டணி ஆட்சியையே பாஜக அமைத்துள்ளது. காங்கிரஸ் 99 இடங்களில் வென்ற நிலையில், எதிர்க்கட்சிகள் வலிமையாக உள்ளன.
இது தவிரப் பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளிலும் வலதுசாரிகளை நிராகரித்த மக்கள் இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பு, அதைத் தொடர்ந்து பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் வலதுசாரி அரசுகள் தங்களைக் காக்கத் தவறிவிட்டதாகவே மக்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாகவே மக்கள் இப்போது மீண்டும் இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகள் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications