உபியில் நடப்பது குண்டர்கள் ராஜ்ஜியம்.. ராகுல் காந்தி கடும் பாய்ச்சல்
காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் குண்டர் ராஜ்ஜியம் நடப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். அந்த மாநிலத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி இன்று உயிரிழந்ததை அடுத்து ராகுல் காந்தி அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த தனது ட்வீட்டில், ''ராம ராஜ்ஜியம் அளிப்பதாக உறுதி அளித்துவிட்டு, குண்டர் ராஜ்ஜியம் அளித்து வருகின்றனர். தன்னுடைய உறவினப் பெண்ணுக்கு நடந்த துன்புறுத்தலை தட்டிக் கேட்டவருக்கு இந்தக் கொடுமை நடந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சிக்கு வந்த பின்னர் ராம ராஜ்ஜியம் அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால், முழுவதுமாக குண்டர் ராஜ்ஜியமாக இருக்கிறது. பத்திரிக்கையாளர் மட்டுமில்லை, சட்டத்தை காப்பதற்காக உழைக்கும் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த நிலையில் எப்படி சாதாரண மக்கள் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியும்'' என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும், வழக்கறிஞருமான அபிஷேக் சிங்வி, ''காசியாபாத் பகுதியில் பத்திரிக்கையாளர் விக்ரம் ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. மகள்களுடன் ஸ்கூட்டரில் செல்லும்போது அவரை சுட்டுள்ளனர். நல்ல வேளை அவரது மகள்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. கடவுளுக்கு நன்றி. உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாதது அதிர்ச்சி அளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார், ''காசியாபாத் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யாருமே பாதுகாப்பாக இல்லை. இதை காட்டுத்தனமான ராஜ்ஜியம் என்று கூறாமல் வேறு என்ன கூறுவது. அரசு அமைதியாக இருக்கிறது. கிரிமினல்கள் வலம் வருகின்றனர். காலையில் வீட்டை விட்டு செல்பவர்கள் மீண்டும் வீட்டுக்கு திரும்புவோமா என்ற அச்சத்துடன் உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications