பூஸ்டர் டோஸ்: கோவிஷீல்ட் அல்லது கோவாக்சின் எந்த தடுப்பூசி போட வேண்டும்? அதிகாரிகள் முக்கிய விளக்கம்
டெல்லி: இந்தியாவில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வேக்சின் போடப்படும் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
2ஆம் அலை ஏற்படும் வரை இந்தியாவில் வேக்சின் பணிகள் மெதுவாகவே நடைபெற்று வந்தது. அதன் பின்னரே வேக்சின் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியது.

பூஸ்டர் டோஸ்
இதுவரை இந்தியாவில் 125 கோடி டோஸ் வேக்சின்கள் போடப்பட்டுள்ளன. நாட்டு மக்கள்தொகையில் சுமார் 61% பேருக்குக் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 40% பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதற்கிடையே ஓமிக்ரான் அச்சம் அதிகரித்ததால் பூஸ்டர் டோஸ் பணிகளை மத்திய அரசு தொடங்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். இரண்டு டோஸ்களில் இருந்து கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி 3 மாதங்களுக்குப் பிறகு குறையத் தொடங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் பூஸ்டர் டோஸ்
அதன்படி வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் இந்த பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். முன்களப் பணியாளர்களுக்கு இந்த 3ஆம் டோஸ் வேக்சின் போடப்படும். அதேபோல 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வேக்சின் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேக்சின் மிக்ஸிங்
இந்த 3ஆம் டோஸ் வேக்சின் 2ஆம் டோஸ் போடப்பட்ட நாளில் இருந்து 9 முதல் 12 மாத இடைவெளியில் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே வேக்சின் டோஸ்களை மிக்ஸ் செய்து போடுவதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது முதல் 2 டோஸ் ஒரு வேக்சின் போட்டுக் கொண்ட நபருக்கு 3ஆவது டோஸாக புதிய வேக்சின் கொடுத்தால் பலன்கள் அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

ஆய்வுகள் கூறுவது
பிரிட்டன் நாட்டில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் கூட சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதில் மாடர்னா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டவர்களுக்கு ஒன்பது வார இடைவெளிக்குப் பிறகு அஸ்ட்ராஜெனெகா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளைப் போட்டால் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்விலும் கூட, மூன்றாவது டோஸாக கோவிஷீல்ட் என்று இந்தியாவில் அழைக்கப்படும் அஸ்ட்ராஜெனெகா வேக்சினை செலுத்தும்போது ஒமிக்ரானை அழிக்கும் ஆன்டிபாடிகளை கணிசமாக அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்
இதன் காரணமாக இந்தியாவிலும் வேக்சின்களை மிக்ஸ செய்து கொடுக்கப்படுமா என்ற கேள்விகள் எழத் தொடங்கியது. இருப்பினும், இந்தத் தகவலை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. ஒருவருக்கு முதல் 2 டோஸ்கள் எந்த வேக்சின் அளிக்கப்பட்டதோ அதே வேக்சின் தான் 3ஆவது டோஸாக போடப்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது முதலில் ஒருவருக்கு கோவிஷீல்டு போடப்பட்டிருந்தால் 3ஆவது டோசும் கோவிஷீல்டு வேக்சினே போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications