'இந்தியாவில் 6 மாதங்களில் Endemic ஆக மாறும் கொரோனா..'ஏன் முக்கியமானது? பட்டியலிட்டு விளக்கும் ஆய்வாளர்
டெல்லி: இந்தியாவில் புதிதாகத் தோன்றும் உருமாறிய கொரோனா வகைகள் மட்டுமே 3ஆம் அலையை ஏற்படுத்தாது என தெரிவித்த தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சுர்ஜித் சிங், அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் என்டமிக் நிலையை அடையும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுவதுமாக கட்டுக்குள் வரவில்லை. சில நாடுகளில் மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் மீது வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு 3 லட்சம் வரை கூட சென்றது.
என்னாச்சு.. தமிழகத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்று.. சென்னை மீண்டும் டாப்.. என்ன காரணம்?
கொரோனா 3ஆம் அலை
அதேபோல தினசரி உயிரிழப்புகளும் 4000ஐ கூட தாண்டியது. அதன் பின்னரே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கியது. இப்போது கேரளா தவிர பெரும்பாலான இடங்களில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள்ளேயே உள்ளது. கேரளாவில் மட்டும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் இது 3ஆம் அலையின் தொடக்கமாக இருக்கலாம் என்ற அச்சமும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா 3ஆம் அலை குறித்தும் கொரோனா எப்போது குறையும் என்பது குறித்தும் தேசிய நோய் கட்டுப்பாட்டு பிரிவின் இயக்குநர் முக்கிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
6 மாதங்களில் என்டமிக்
கொரோனா எப்போது கட்டுக்குள் வரும் என்பது குறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் சுஜித் திங்க கூறுகையில், "கடந்த காலங்களில் இந்த வைரஸ் நம் கணிப்புகளை எல்லாம் மிஞ்சியுள்ளது. ஆனால் இப்போது நம்மிடம் கூடுதல் தரவுகள் உள்ளன. இதை வைத்து, அடுத்த 6 மாதங்களில் நாம் என்டமிக் நிலையை அடைவோம் எனச் சொல்லலாம். அதாவது என்டமிக் நிலைக்கு வந்தால் வைரஸ் பரவலை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். நமது சுகாதார கட்டமைப்பில் பெரியளவு அழுத்தம் இருக்காது.
கேரளா வைரஸ் பாதிப்பு
கொரோனா உயிரிழப்புகளும் பரவலும் கட்டுக்குள் இருந்தால், நாம் இந்த நோயை எளிதாக நிர்வகிக்க முடியும். கடந்த சில வாரங்களாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த கேரளாவிலும் கூட இப்போது வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. இப்போதைய சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை தடுக்கும் ஒரு முக்கிய ஆயுதமாக உள்ளது. வேக்சின் பணிகளை நம்மால் எவ்வளவு விரைவாக முடிக்க முடிகிறதோ அவ்வளவு விரைவாக கொரோனா பரவல் கட்டுக்குள் வரும். எனவே முடிந்த வரை அனைவருக்கும் விரைவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.
கொரோனா வேக்சின்
இந்தியாவில் இப்போது 75 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒருடோஸ் தடுப்பூசி என்பது 31% வரை தடுப்பாற்றலை அளிக்கிறது. எனவே, இந்தியாவில் குறைந்தது 20 முதல் 40 கோடி பேருக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு தடுப்பாற்றல் உள்ளது. இது கொரோனாவை கட்டுப்படுத்த நமக்கு உதவும். அதேநேரம் வேக்சின் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதால், கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் ஒருவர் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை முறையாகப் பின்பற்ற வேண்டும்.
Recommended Video
கொரோனா வழிகாட்டுதல்கள்
அதேபோல, தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 20 முதல் 30% பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவும் ஒருவர் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும். பெரும்பாலும் உருமாறும் கொரோனா காரணமாகவே இதுபோல தடுப்பூசி போட்ட பின்னரும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இப்போது வரை நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசி போடப்பட்ட பிறகு 70 முதல் 100 நாட்களில் ஒருவரது உடலில் வைரஸ் தடுப்பாற்றல் குறையத் தொடங்குகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு இது மேலும் விரைவாகக் குறையும்.
உருமாறிய கொரோனா
தற்போது வரை இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனா வகைகள் எதுவும் இல்லை. சி 1.2 மற்றும் மூ உருமாறிய கொரோனா வகைகள் இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை. இது நல்ல ஒரு விஷயமாகும். அதேநேரம் உருமாறிய கொரோனா மட்டுமே 3ஆம் அலையை ஏற்படுத்தாது. கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் இருப்பது, ஆன்டிபாடிகள் குறைவது என பல்வேறு காரணங்கள் இதில் உள்ளன. அடுத்து பண்டிகை காலம் வருவதால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கலாம் என சிலர் அஞ்சுகின்றனர்" என்றும் அவர் தெரிவித்தார்.