கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பாதீர்... சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
டெல்லி: கொரோனா தடுப்பூசி குறித்தும் பரவும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாநிலங்களின் கருத்துகளை இணைத்தே வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.
ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியின் அவசரக்கால பயன்பாட்டிற்கு மத்திய அரசு நேற்று அனுமதியளித்தது.
அதைத்தொடர்ந்து, நாட்டில் தடுப்பூசி அளிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒத்திகை
முன்னதாக, நாட்டில் நான்கு மாநிலங்களில் முதல்கட்டமாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தடுப்பூசி வழங்கும் ஒத்திகை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று நாடு முழுவதும் இரண்டாம் ஒத்திகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பார்வையிட்ட ஹர்ஷ் வர்தன்
தலைநகர் டெல்லியில் ஜிடிபி மருத்துவமனை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை, தியாகர்கஞ்ச் ஆரம்பச் சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்து வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காலை ஜிடிபி மருத்துவமனைக்கு நேரில் சென்று தடுப்பூசி ஒத்திகை பணிகளைப் பார்வையிட்டார்.
மிகவும் பாதுகாப்பானது
அதன் பின்னர் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், "தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து எந்த வதந்திகளும் இருக்கக்கூடாது. அனைத்தும் மிக விரிவாகச் சரிபார்க்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் போலியோ தடுப்பு மருந்து உருட்டப்பட்டபோதும்கூட, அது குறித்து வதந்திகள் பரவின. ஆனால், போலியோ தடுப்பு மருந்தை மக்களுக்கு அளிக்கத் தொடங்கியதும், அதன் பாதுகாப்பு தன்மை குறித்து மக்கள் உணர்ந்தனர். அதோபோலதான், கொரோனா தடுப்பூசியும் மிகவும் பாதுகாப்பானது" என்றார்.
மாநிலங்களின் கருத்துகள்
தடுப்பூசி ஒத்திகை குறித்துப் பேசிய அவர், "முதலில் 4 மாநிலங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றியே இன்று நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படுகின்றன. உண்மையான தடுப்பூசி கொடுப்பதைத் தவிர, தடுப்பூசி வழங்கும் பணியில் இருக்கும் ஒவ்வொரு நடைமுறையும் இந்த ஒத்திகையில் முறையாகப் பின்பற்றப்படுகிறது" என்றார்.