வெறும் ரூ.100 பரிவர்த்தனையை வைத்து நூல் பிடித்த போலீஸ்! ரூ.4 கோடி நகைகள் மீட்பு! மிரண்ட கொள்ளையர்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் வெறும் 100 ரூபாய் டிஜிட்டல் பரிவர்த்தனையை வைத்து போலீசார் மிகப் பெரிய கொள்ளை சம்பவத்தையே கண்டுபிடித்துள்ளனர்.
தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் கடந்த புதன்கிழமை கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அதில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடிக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை வெறும் ஒற்றை டிஜிட்டல் பரிவர்த்தனை வைத்து போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அதுவும் ஒரே நாளில்..!

டெல்லி
மத்திய டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நான்கு பேர் காவலர்கள் போல வேடம் அணிந்து கொண்டு, மற்றொரு கூட்டாளியின் உதவியுடன் இரண்டு கூரியர் நிறுவன அதிகாரிகளிடம் நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர், அவர்கள் கூரியர் ஊழியர்களின் கண்ணில் மிளகாய்ப் பொடியை வீசிய அவர்கள் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர்.

கொள்ளை
பஹர்கஞ்ச் பகுதியில் அதிகாலை 4-5 மணிக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாகச் சரியாக 4.50 மணியளவில் போலீசாருக்கு அழைப்பும் வந்துள்ளது. அந்த தனியார் கூரியர் நிறுவனம் நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை டெலிவரி செய்யும் நிறுவனம் ஆகும். அதிகாலை 4.30 மணியளவில், அந்த ஊழியர்கள் சண்டிகர் மற்றும் லூதியானாவுக்கு எடுத்துச் செல்லும் சரக்குகளை பேக் செய்துள்ளனர்.

டீ குடித்த கொள்ளையன்
அவர்கள் தங்கள் வாகனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது குற்றவாளிகள் நான்கு பேர் அவர்களை வழிமறித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முதலில் அருகே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் குற்றவாளிகள் கடந்த 15 நாட்களாக அவர்களைப் பின்தொடர்ந்து உள்ளது தெரிய வந்தது. அவர்களில் ஒரு திருடன் சில நாட்களுக்கு நோட்டமிடும் போது முன்பு அங்கிருந்த கடையில் டீ வாங்கி குடித்துள்ளான்.

டிரைவர்
அதன் பின்னர் சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் ஒரு டாக்ஸியை நிறுத்தி எதோ பேசியுள்ளார். பின்னர் டாக்ஸி டிரைவரிடம் இருந்து 100 ரூபாயை வாங்கியுள்ளார். டாக்சி ஓட்டுநரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் (திருடர்) மொபைல் போனை பயன்படுத்தியது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக கடையின் உரிமையாளரிடம் போலீசார் விசாரித்தனர். குற்றவாளி டீ வாங்கியதாகவும் இருப்பினும் அவனிடம் அப்போது பணம் இல்லை.

வெறும் ரூ.100
இதன் காரணமாகவே டிரைவரை நிறுத்தி உள்ளான். டிரைவரை நிறுத்திய திருடன், அவருக்கு ரூ. 100ஐ மொபைலில் அனுப்பிவிட்டு, ரொக்கமாக வாங்கி உள்ளார். இதையடுத்து அந்த டிரைவரை கண்டுபிடித்த போலீசார், அவரது மொபைலை ஆய்வு செய்ததில் குற்றவாளி பேடிஎம் மூலம் அனுப்பியது பணம் தெரிய வந்தது. இதையடுத்து பேடிஎம் தலைமையகத்தைத் தொடர்பு கொண்ட போலீசார் குற்றவாளியின் மொபைல் எண்ணைப் பெற்றுள்ளனர்.

தூக்கிய போலீஸ்
இதன் மூலம் அந்த குற்றவாளியின் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போலீசார், அவரது வீட்டிற்குச் சென்றனர். இருப்பினும், அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். அங்கு இருந்த மற்றவர்களின் செல்போன் எண்ணை வைத்து கொள்ளையர்களை அடையாளம் கண்ட போலீசார், அதை டிராக் செய்துள்ளனர். அப்போது தான் அவர்கள் ஜெய்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

என்ன நடந்தது
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "அவர்கள் விலை உயர்ந்த நகையை எடுத்துச் செல்வது கொள்ளையர்களுக்குத் தெரியும். இதனால் தங்களை போலீசார் எனக் கூறிக் கொண்ட அவர்கள், சோதனை செய்ய வேண்டும் கூறியுள்ளனர். அவர்களில் ஒருவர் போலீஸ் யூனிபார்மில் இருந்ததால் கூரியர் ஊழியர்களுக்குச் சந்தேகம் வரவில்லை. அப்போது அசந்த நேரம் பார்த்து கண்ணில் மிளகா பொடியை தூவி நகையைக் கொள்ளை அடித்துள்ளனர்" என்றார்.











Click it and Unblock the Notifications