வெறும் 9 வினாடி தான்.. நாளை தரைமட்டமாகும் இந்தியாவின் உயரமான 40 மாடி கட்டடம்.. எப்படி நடக்கும்?
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இந்தியாவின் உயரமான இரட்டை கோபுர கட்டடம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி நாளை வெடிவைத்து வெறும் 9 வினாடிகளில் தகர்க்கப்படுகிறது. சுற்றி கட்டங்கள் உள்ள நிலையில் கட்டட இடிப்பு எப்படி நடக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ஏபெக்ஸ், சியான் எனும் பெயரிடப்பட்டுள்ள 2 அடுக்குமாடி கட்டங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டடங்கள் தலா 40 மாடிகள் கொண்டதாக உள்ளன.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‛சூப்பர் டெக்' எனும் நிறுவனம் இந்த கட்டடத்தை கட்டியது. குதூப் மினாரை விட உயரமாக கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 320 அடி உயரம் உயர்ந்து நிற்கும் இந்த கட்டடம் தான் இந்தியாவின் மிகப்பெரிய கட்டடம் என கூறப்படுகிறது.
10 ஆண்டு சட்டப்போராட்டம்.. 10 நொடியில் தரைமட்டாகும் 40 அடுக்கு குடியிருப்பு.. இவ்வளவு கோடி இழப்பா?
இரட்டை கோபுரத்தை இடிக்க உத்தரவு
இரட்டை கோபுரங்கள் என அழைக்கப்படும் இந்த 2 கட்டடங்களும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதாவது கட்டடம் கட்டப்பட்ட நிலையில் முன்பணம் கொடுத்து பதிவு செய்தவர்கள் கட்டட வரைபடத்துக்கும், கட்டடத்துக்கும் இடையே வேறுபாடு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் நொய்டா பகுதியின் தட்பவெப்பம் மற்றும் புவியியல் அமைப்புக்கு எதிராக கட்டடம் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து குடியிருப்போர் நல சங்கம் சார்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2014ல் இடிக்க உத்தரவிட்டது.
உறுதி செய்த உச்சநீதிமன்றம்
இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 2021ல் ஆகஸ்ட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் கட்டுமான நிறுவனத்தின் மறுஆய்வு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதோடு 2 கட்டங்களில் 652 வீடுகளுக்கு சூப்பர் டெக் நிறுவனம் பெற்ற நிலையில் அதனை 12 சதவீத வட்டியுடன் கொடுக்க உத்தரவிட்டது.
நாளை மதியம் இடிப்பு
அதன்படி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு இந்த இரட்டை கோபுர கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட உள்ளது. 7.5 லட்சம் சதுரஅடியில் 900 பிளாட்டுகள் உள்ள கட்டடங்களின் இடிப்பு பணியை மும்பையை சேர்ந்த எடிபிக் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இந்த இரட்டை கோபுர கட்டடத்தை சுற்றி ஏராளமான பில்டிங்குகள் உள்ளதால் இதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
7 ஆயிரம் பேர் வெளியேற்றம்
இதற்காக தற்போது கட்டடத்தை சுற்றியுள்ள 7 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் கால்நடைகள் உள்பட அனைத்தும் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கட்டட இடிப்புக்கான முன்னெடுப்பு பணிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. நாளை கட்டட இடிப்பையொட்டி அந்த பகுதியில் தரை மற்றும் வான்வெளி போக்குரவத்து சில மணிநேரம் நிறுத்தப்பட உள்ளது.
3,700 கிலோ வெடிமருந்துகள்
இந்த கட்டடத்தை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது. கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் வெடிமருந்துகள் வைக்கப்பட்டுள்ளன. நாளை மதியம் 2.30 மணிக்கு வெறும் 9 வினாடி முதல் 12 வினாடிக்குள் இடித்து அகற்றப்பட உள்ளது. இந்த கட்டட இடிப்பு பணியானது ரூ.20 கோடி செலவில் இடிக்கப்படுகிறது.
9 முதல் 12 வினாடியில் தரைமட்டம்
இதன்மூலம் 55 ஆயிரம் டன் கட்டட கழிவுகள் உருவாக உள்ளது. இதனை அகற்ற 3 மாதம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் கட்டட இடிப்பின் போது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டட கழிவுகளை உடனுக்கு உடன் அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இரட்டை கோபுரங்களை இடிக்கும் செயல்முறை பற்றி அதிகாரிகள் கூறுகையில், ‛‛இது ஒரு எளிய செயல்முறை. டைனோமில் இருந்து மின்னோட்டம் உருவாக்கி டெட்டனேட்டர்கள் மூலம் கட்டடம் இடித்து அகற்றப்படும். இதற்காக கட்டடத்தின் 9,000 இடங்களில் வெடிமருந்துகள் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டுள்ளன. பட்டனை அழுத்தியவுடன் வெடிமருந்துகள் வெடித்து கட்டடங்கள் அப்படியே உருக்குலைந்து உட்புறமாக விழும்'' என்றார்.