கடுமையாக எதிர்த்த மத்திய அரசு! தமிழக அரசின் "கோட்ஸே" வாதம்! பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனையோடு இருக்கும் 7 பேரில் முதல் முதலாக இப்போதுதான் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.
அதோடு வழக்கு விசாரணை நடக்கும் இடைப்பட்ட காலத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் இவர் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கில்தான் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி உள்ளனர்.
'முடிந்தவரை போராடினோம்.. உபி தேர்தல் கருத்துக்கணிப்புக்கு பிறகு மனம் திறந்த பிரியங்கா காந்தி
2014ல் என்ன நடந்தது?
2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது. இதை சுட்டிக்காட்டி 2014ல் இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.
மத்திய அரசு எதிர்ப்பு
இந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நடராஜன் ஆஜர் ஆனார். இவர் பேரறிவாளன் தண்டனையை குறைக்க கூடாது என்று கடும் வாதம் வைத்தார். அவர் வைத்த வாதத்தில், பேரறிவாளன் வழக்கில் தண்டனை குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஏற்கனவே அவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது. அவருக்கு ஏற்கனவே ஒரு நீதி சலுகை வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் அவரின் தண்டனையை குறைக்க கூடாது அல்லது வழக்கில் இருந்து விடுதலை செய்ய கூடாது. இந்த அதிகாரம் மாநில அரசுக்கும் கிடையாது, என்று வாதம் வைத்தார்.
கடும் வாதம்
குடியரசுத் தலைவர் மட்டுமே இதில் முடிவு எடுக்க முடியும். ஸ்ரீஹரன் வழக்கு இதற்கு உதாரணம். அவருக்கு மட்டுமே சட்ட விதி 432 (7)ன் கீழ் அதிகாரம் உள்ளது. என்று குறிப்பிட்டார். இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் என்னென்னெ பிரிவுகள், அமைப்புகள் விசாரணை நடத்துகிறது என்று கேட்டனர். அதற்கு இந்திய சட்ட பிரிவு, ஆயுத பிரிவு, வெளிநாட்டு சட்ட பிரிவு, தடா சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் விசாரணை நடப்பதாக மத்திய அரசு தரப்பு கூறியது.
தமிழ்நாடு அரசு வாதம்
இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி வைத்த வாதத்தில், இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. ஆயுள் தண்டனை பெற்ற கோட்சே சகோதரர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டாரே?.
மாநில அரசு
கோபால் கோட்சே போல் இல்லாமல் பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இந்த அதிகாரம் மாநில அரசுக்கு கீழ் வருகிறது. மாநில அரசு இதில் முடிவு எடுக்க முடியும். இதனால் மாநில அரசு நினைத்தால் ஆயுள் தண்டனை கைதிகள் போல இந்த வழக்கிலும் மன்னிப்பு வழங்க முடியும் என்று வாதம் வைத்தனர்.
பேரறிவாளன் தரப்பு வாதம்
இதில் பேரறிவாளன் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சங்கரநாரயணன் ஆஜர் ஆனார். அவர் வாதத்தில், இந்த வழக்கில் கவர்னர் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தவில்லை. பேரறிவாளனின் கருணை மனு மீது அவர் முடிவு எடுக்கவில்லை. இந்த வழக்கில் மேலும் விசாரணை நடத்த போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் விசாரணை இன்னும் முடிக்கப்படவில்லை.
பெரிய விசாரணை
இந்த வழக்கை எம்டிஎம்ஏ மீண்டும் விசாரிப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ராஜீவ் காந்தி மரணத்திற்கு பின் வேறு சதித்திட்டங்கள் இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கூறி இந்த அமைப்பு விசாரணை நடத்துகிறது. இந்த விசாரணைக்கு பின்பே ஆளுநர் முடிவு எடுப்பார் என்று வாதம் வைக்கப்படுவதை ஏற்க முடியாது. மாநில அரசு அமைச்சரவை எடுத்து இருக்கும் முடிவை ஆளுநர் மதிக்க வேண்டும்.
நன்றாக இருக்கிறார்
இதில் குடியரசுத் தலைவருக்கே முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளதாக ஆளுநர் கூற முடியாது. பேரறிவாளன் 3 முறை பரோலில் வந்துள்ளார். அவர் மூன்று முறையும் நன்றாக செயல்பட்டு உள்ளார். அவர் மீது எந்த புகாரும் இல்லை. அதேபோல் அவர் சிறையில் இருந்த போதும் படித்து இருக்கிறார். நல்ல பெயர் பெற்று இருக்கிறார். அவர் 32 வருடமாக சிறையில் இருக்கிறார், என்று பேரறிவாளன் தரப்பு வாதம் வைத்தது.
இடைப்பட்ட காலத்தில் விடுதலை
தமிழ்நாடு அரசு மற்றும் பேரறிவாளன் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 32 வருடமாக பேரறிவாளன் சிறையில் இருக்கிறார். இந்த வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே முடிவு எடுக்கும் உரிமை உள்ளது என்று மத்திய அரசு வாதத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரம் மாநில அரசு தொடர்பானது. அதனால் மாநில அரசுக்கே இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. ஆளுநர் தனக்கு வழங்கப்பட்டு இருக்கும் சுதந்திரத்தை வைத்து அமைச்சரவை எடுக்கும் முடிவை மதிக்காமல் இருப்பது சரியல்ல.
பெயில்
இந்த வழக்கில் பெரிய விசாரணை, சதி விசாரணை நடக்கும்படி நடக்கட்டும். அதுவரை பேரறிவாளன் ஜாமீனில் வெளியே இருக்கட்டுமே. அவர் மூன்று முறை பரோல் நீட்டிக்கப்படும் எந்த தவறும் செய்யவில்லை. நன்றாக செயல்பட்டு இருக்கிறார். அவர் 30 வருடமாக சிறையில் இருக்கிறார். நீங்கள் விசாரணையை முடியுங்கள், அவர் பெயிலில் இருக்கட்டும். அதனால் அவருக்கு பெயிலுக்கான உரிமை உள்ளது. அவர் பெயிலில் இருக்கும் வரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் எல்லா மாதமும் முதல் தேதி ஆஜராக வேண்டும். அவருக்கு பெயில் வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் மாதம் முழுக்க நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.