எனக்கு அரை மணிநேரம் கொடுங்க.. ஏழைகளுக்கான பட்ஜெட்டை எப்படி தயாரிக்கிறதுனு காட்டுறேன்: மம்தா அட்டாக்!
வெறும் 30 நிமிடத்தில் இதைவிட நல்ல பட்ஜெட்டை நான் தயாரிப்பேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
டெல்லி : மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் எந்த அம்சமும் இல்லை எனவும், எனக்கு ஒரு அரைமணி நேரம் தாருங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை எப்படி உருவாக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் விண்ணை முட்டும் நிலையில், வருமான வரி விலக்கினால் என்ன பயன்? பட்ஜெட்டில் வேலையில்லாதவர்களுக்கான திட்டம் எதுவும் இல்லை என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
நெடுஞ்சாலைத்துறைக்கு பூஸ்ட்.. பட்ஜெட்டில் ரூ.1.62 லட்சம் கோடி.. பின்னணியில் சூப்பர் பிளான்! அடடே!
பட்ஜெட் தாக்கல்
2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 7 முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டில், புதிய வரி விதிப்பு முறைப்படி ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி தள்ளுபடி கிடைக்க வகை செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
கறுப்பு பட்ஜெட்
இந்த பட்ஜெட் குறித்து மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், "இந்த பட்ஜெட் எதிர்கால நன்மையை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அல்ல. ஏழைகளுக்கு எதிராகவும் மக்களுக்கு எதிராகவும் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. இந்த பட்ஜெட் ஒரு தரப்பு மக்களுக்கே பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கும் சந்தர்ப்பவாத பட்ஜெட். இது ஒரு 'கறுப்பு' பட்ஜெட்.
ஒரு வார்த்தையும் இல்லை
நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காண இந்த பட்ஜெட் உதவாது. நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறிந்த்து இந்த பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அரை மணி நேரம் கொடுங்க
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு எந்த வித பயனையும் அளிக்கப் போவதில்லை, இது யாருக்குமே உதவாது. இந்த பட்ஜெட்டில் நம்பிக்கையளிக்கக்கூடிய எந்த அம்சமும் இல்லை. எனக்கு ஒரு அரைமணி நேரம் தாருங்கள், ஏழைகளுக்கான பட்ஜெட்டை எப்படி உருவாக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு காட்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.