ராமர் பால விவகாரம்:நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி உறுதி.. பிரதமர் மோடியை எச்சரித்த சு.சாமி
டெல்லி: ராமர் பாலத்தை பாரம்பரிய நினைவு சின்னமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவிக்காவிட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும். இல்லாவிட்டால் பிரதமர் மோடியை நீக்கிவிட்டு பாஜகவை வெற்றி பெற இந்துத்துவாதிகள் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பன் தீவுகளுக்கும்-இலங்கைக்கும் இடையே சுண்ணாம்பு கற்களால் ஆன திட்டுகள் தொடர்ச்சியாக உள்ளன.
இது புராணங்கள் அடிப்படையில் இது ராமர், அணில் மற்றும் அனுமான் உதவியுடன் கட்டப்பட்ட ராமர் பாலம் என்ற கருத்தும் உள்ளது.
சென்னையில் ராமர் கோயிலை திமுக அரசு இடித்ததாக பாஜக நிர்வாகி பகிர்ந்த வீடியோ- Fact Check
சேது சமுத்திர திட்டம்
இதற்கிடையே தான் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தபோது கடந்த 2007ல் சேதுசமுத்திர திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் ராமர் பாலம் பகுதியில் நடைமுறைப்படுத்தப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்த நிலையில் திட்டம் தடைப்பட்டது.
பாரம்பரிய சின்னமாக்க வழக்கு
மேலும் ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்க உத்தரவிடவேண்டும் என சுப்பிரமணியசாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இது விசாரணையில் உள்ளது. இன்று கூட வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகவில்லை. மாறாக அவரது ஜூனியர் ஆஜராகி 4 வாரம் வரை காலஅவகாசம் கோரினார்.
இன்று விசாரணை
இந்த வேளையில் தலைமை நீதிபதி சந்திரசூட், ‛‛எதற்காக இந்த வழக்கை இழுத்தடிக்கிறீர்கள்'' என கேள்வி கேட்டார். அப்போது ராமர் பாலத்தை பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்க முடியாமா? இல்லையா? என்பது தான் வழக்காக உள்ளது. இதனை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியசாமி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சுப்பிரமணியசாமி எச்சரிக்கை
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது; ‛‛மோடி அரசு ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்காவிட்டால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும். இல்லாவிட்டால் இந்துத்துவா சக்திகள் மோடியை நீக்கிவிட்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். இதில் ஒன்றை தான் இந்துத்துவவாதிகள் முடிவாக எடுத்து மோடிக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்கின்றனர்'' என குறிப்பிட்டுள்ளார்.