திருமணத்துக்கு பிறகு மனைவி ‛சர்நேம்’ மாற்ற வேண்டாம்..92சதவீத இளைஞர்கள் ஆதரவு..வெளியானது சர்வே முடிவு
டெல்லி: இந்தியாவில் திருமணத்துக்கு பிறகு பெண்கள் தங்களின் ‛சர்நேம்' மாற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் 92 சதவீத ஆண்கள் தங்கள் மனைவி ‛சர்நேம்' மாற்றம் செய்ய தேவையில்லை என கூறியுள்ளனர்.
இந்தியாவில் திருமணம் முடிந்த பிறகு பெண்கள் தங்களின் கணவரின் குடும்பம், ஜாதி பெயரை சர்நேம்மாக சேர்ப்பது பல இடங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.
இவ்வாறு செய்வதன் மூலமே புதுமணப்பெண் தான் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டின் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினராக முற்றிலுமாக மாறிவிடுகிறார் என சில இடங்களில் நம்புகின்றனர்.

சட்டம் கிடையாது
திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் சர்நேம்மை மாற்றம் செய்ய வேண்டும் என்று சட்டங்கள் எதுவும் இல்லை. இருப்பினும் காலம்காலமாக சம்பிரதாயம் அல்லது திருமண சடங்கு போன்று பெண்கள் பின்பற்றுகின்றனர் அல்லது பின்பற்ற வற்புறுத்தப்படுகின்றனர். பெண்ணியவாதிகள் இதை விரும்புவது இல்லை. இதனால் சர்நேம் மாற்றம் செய்ய அவர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இளைஞர்களிடம் சர்வே
இந்நிலையில் தான் Betterhalf.ai எனும் திருமண பந்தத்துக்கான செயலி இந்திய இளைஞர்களிடம் திருமணம் குறித்து பல்வேறு விஷயங்கள் பற்றிய கேள்விகளை முன்வைத்து சர்வே ஒன்றை மேற்கொண்டது. இந்த சர்வேயில் திருமணம் அல்லது திருமணத்துக்கு பிறகு எந்தெந்த பழக்கவழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எந்தெந்த பழக்கங்கள் கைவிடப்பட வேண்டும் என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

சர்வே முடிவில் இருப்பது என்ன?
இந்த சர்வேயின் முடிவில் இந்தியாவில் 92 சதவீத இளைஞர்கள் திருமணத்துக்கு பிறகு தங்கள் மனைவி சர்நேம் மாற்றம் செய்ய வேண்டாம் எனவும், அவர்கள் தங்களது குடும்பத்தின் சர்நேம் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீதத்தினர் மட்டுமே சர்நேம் மாற்றம் அவசியம் என தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 21ம் ஆண்டில் உள்ள இளைஞர்கள் சர்நேம் விஷயத்தில் பெண்களை கட்டாயப்படுத்த விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது.

விரைவில் 100 சதவீதம்
இதுபற்றி Betterhalf.ai தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான பவன் குப்தா கூறுகையில், "பாரம்பரியமாக நடந்து வரும் இந்திய திருமணங்களில் மணப்பெண் தனது சர்நேமை மாற்றும் நிலை இருந்து வருகிறது. தற்போது பெண்ணியத்துக்கான குரல் வலுத்துள்ளது. இதனால் அவர்கள் சொந்த முடிவுகள் எடுத்து வருகின்றனர். இதற்கு ஏற்ப இளைஞர்களும் புரிதலுடன் உள்ளனர். இதைதான் இந்த சர்வே காட்டியுள்ளது.
ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் பற்றியும் நாம் ஆராய வேண்டியுள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவில் சரிஎன்றால் பின்பற்றாலும் இல்லாவிட்டால் கைவிடலாம். இதனை இளைஞர்கள் ஒப்புக்கொள்கின்றார். இளைஞர்களின் இத்தகைய பதிலால் நான் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் இது 100 சதவீதமாக மாறும்'' என்றார்.












Click it and Unblock the Notifications