தலைநகரில் மாநில அரசின் அதிகாரம் குறைப்பு.. மத்திய அரசுக்கு கூடுதல் பவர்.. புதிய சட்ட திருத்தம்
டெல்லி: தலைநகரில் மாநில அரசைக் காட்டிலும் மத்திய அரசுக்கு அதிக அதிகாரம் தரும் புதிய மசோதா மக்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. 70 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 67 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.

தலைநகர் டெல்லியில் மாநில அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது மத்திய அரசுக்கு அதிக அதிகாரமா என்பதில் இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவியது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும், போலீஸ, சட்ட ஒழுங்கு தவிர மற்ற விஷயங்களில் துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் டெல்லி அரசுக்குத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில், தேசிய தலைநகர் டெல்லி அரசு திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. இந்த மசோதா டெல்லியில் மாநில அரசு மற்றும் துணைநிலை ஆளுநருக்கு என்ன அதிகாரம் என்பதைத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாறாக இந்த புதிய சட்டத்தில் டெல்லி அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கும் முன்பு துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் டெல்லி அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில் உள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தச் சட்டம் தேர்தலில் தோற்ற பாஜகவுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் இருப்பதாகவும் இது டெல்லிவாசிகளுக்கு பெரும் அவமானம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
தற்போது மக்களைவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா விரைவில் மாநிலங்களவைக்கும் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications