ஜாமீனை ஏன் மறுக்க வேண்டும்? எந்த காரணமும் இல்லையே.. டீஸ்டா செதல்வாட் வழக்கில் உச்ச நீதிமன்றம்
டெல்லி: டீஸ்டா செதல்வாட் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித், ''சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறை வைத்திருப்பது ஏன் என்றும்? ஆறு வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொன்டு நோட்டீசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் எந்த அடிப்படையில் உத்தரவிட்டது? என்றும் கேள்வி எழுப்பினார்.
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் கரசேவகர்கள் 58 பேர் கொல்லப்பட்டனர்.
இதன்பின்னர் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத்தின் குல்பர்க் சொசைட்டியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் முன்னாள் காங்கிரஸ் எம். பி இசான் ஜாப்ரி உள்பட பலர் கொல்லப்பட்டனர்.
குஜராத் கலவர விவகாரத்தில் மோடிக்கு எதிராக சதி- டீஸ்டா செதல்வாட் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
மோடி மீது குற்றச்சாட்டு
நாடு முழுவதையும் உலுக்கிய இந்த வன்முறை நடைபெற்ற போது அந்த மாநிலத்தின் முதல்வராக மோடி இருந்தார். இதனால், இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையில் மோடி உள்பட குற்றம் சாட்டப்பட்ட 64 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
சிறப்பு புலனாய்வுக் குழுவானது மோடி உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்து ஈசான் ஜாப்ரி மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மோடி உள்ளிட்டோரை சிறப்பு புலனாய்வு குழு விடுதலை செய்ததை உறுதி செய்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.
ஜாமீன் கோரி மனுத்தாக்கல்
இந்த உத்தரவு வெளியான மறுநாளே, 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை சம்பவத்தில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்டை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது. டீஸ்டா செதல்வாட்டுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ந் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தங்களுக்கு ஜாமீன் கோரி டீஸ்டா, ஶ்ரீகுமார் ஆகியோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர்.
சிறை வைத்திருப்பது ஏன்
இந்த மனுவை கடந்த மாதம் 3 ஆம் தேதி விசாரித்த குஜராத் உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு நோட்டீஸ் அளித்து மறு விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு லலித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மிக முக்கிய கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் இரண்டு மாதங்களுக்கும் மேலாக சிறை வைத்திருப்பது ஏன் என்றும்? ஆறு வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொன்டு நோட்டீசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் எந்த அடிப்படையில் உத்தரவிட்டது? என்றும் கேள்வி எழுப்பியது.
ஒத்திவைப்பு
மேலும், ஜாமீன் வழங்க முடியாத குற்றம் எதுவும் இல்லை என்றும், இன்னும் குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை. ஜாமீன் மனு மீதான விசாரணையில் தாமதம் ஏன்? குற்றம்சாட்டப்பட்ட பெண்களுக்கு இதேபோன்று தாமதம் ஏற்பட்ட வழக்குகள் உள்ளதா? என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.