மத்திய அரசு நிறுவனத்தை முந்திய ஜியோ நிறுவனம்.. வரலாற்றில் இதுவே முதல்முறை! பிஎஸ்என்எல் பரிதாபம்
டெல்லி: 22 ஆண்டுகளாக மேலாக வயர்லைன் சேவையை வழங்கி வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ பின்னுக்கு தள்ளி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ முன்னேறி இருக்கிறது.
மத்திய அரசின் தொலைதொடர்புத் துறையால் நடத்தப்பட்டு வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 22 ஆண்டுகளால வயர்லைன் சேவையை நாடு முழுவதும் வழங்கி வருகிறது.
அலுவலகங்கள், வீடுகள் என அனைத்திலும் பிஎஸ்என்எல் இணைப்பு இருந்த காலம் மாறி 4ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிஎஸ்என்எல் பின்னடைவை சந்தித்து வருகிறது.
சிங்கம் களமிறங்கிடுச்சே.. அடுத்த வருடம் ஆகஸ்ட் 15ல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை தொடக்கம்- மத்திய அமைச்சர்
4ஜி இணைப்பு
அதிகவேக இணையதள சேவை, தொலைக்காட்சி கேபிள் இணைப்பு, லேண்ட் லைன் என அனைத்து சேவைகளையும் மொத்தமாக வழங்க ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வந்தன. அதே நேரம் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி இணைப்பு தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்கு பிறகே வழங்கப்பட்டன.
வயர்லேன் சேவை
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் செல்போன் மட்டுமின்றி, இணையதளம், வயர் லைன் சேவைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்க்கத் தொடங்கியது. கவர்ச்சிகரமான திட்டங்களால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஜியோவை நோக்கி சென்றனர்.
டிராய் தரவரிசை
இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வயர்லைன் இணைப்புகளை அதிகம் கொண்டுள்ள நிறுவனங்களின் வரிசையை வெளியிட்டு இருக்கிறது. அதில், சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் முதலிடத்திலிருந்து இரண்டாம் இடத்துக்கு சரிந்துள்ளது.
பின்னுக்கு சென்ற பிஎஸ்என்எல்
73.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் ஜியோ நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் 71.3 லட்சம் வாடிக்கையாளர்களுடன் 2 வது இடத்துக்கு சரிவடைந்து உள்ளது. 62 லட்சம் வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம் இதில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
3 ஆண்டுகள்
22 ஆண்டுகளாக வயர்லைன் சேவையை வழங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ 3 ஆண்டுகளுக்கு முன் வயர்லைன் சேவையை தொடங்கிய ஜியோ பின்னுக்கு தள்ளி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் இதன் தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.59 கோடியில் இருந்து தற்போது 2.59 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.