தைவான் மோதலில் தலையை விட்ட இந்தியா.. முதல்முறையாக சீனா மீது நேரடி "விமர்சனம்".. அட்டாக் - பின்னணி!
டெல்லி: தைவான் கடற்பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் சீன ராணுவம் போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டது உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுசி தைவானுக்கு திடீரென வருகை புரிந்தார். தைவான் சீனாவின் ஓர் அங்கமாக கருதும் நிலையில் சீனாவின் அனுமதியின்றி பெலுசி தைவானுக்கு வந்ததுதான் இந்த போர் பயிற்சி மற்றும் பதற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக மௌனமாக இருந்த இந்தியா தற்போது கருத்து தெரிவித்திருக்கிறது.

பிரச்னை
தைவான் சீனாவின் ஒரு அங்கம் என அந்நாடு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், இதை தனிநாடாக அமெரிக்கா கருதுகிறது. அதாவது சீனாவை கலந்தாலோசிக்காமல் தைவான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒப்பந்தம் மேற்கொள்வது என அமெரிக்கா சில நடவடிக்கையில் இறங்கியது. இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த உரசல்களை மேலும் தீவிரமாக்கியது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றிருந்த நிலையில், சீன இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சியை மேற்கொண்டது.

பதற்றம்
இது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் உணவு தானியங்கள் விநியோகத்தில் உக்ரைன்-ரஷ்யா முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில் இந்நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உணவு தானியங்கள் மூன்றாம் தர நாடுகளுக்கு சென்று சேர்வதில் பல தடைகள் மேலெழுந்தன. இதேபோல எலக்ட்ரானிக் பொருள் தொடங்கி பொம்மை வரை என எல்லாமும் சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், ஒருவேளை சீனா போரில் ஈடுபட்டால் அது இதர நாடுகளையும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என அச்சம் உருவானது.

அறிக்கை
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சீனா குறித்து இந்தியா கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. ஏனெனில் இந்தியா 1949ம் ஆண்டில் மக்கள் குடியரசு சீனத்தை ஏற்றுக்கொண்டது. இதன் அர்த்தம் ஓரே சீனா என்பதுதான். அதாவது தைவானை உள்ளடங்கிய சீனா என்பதுதான். அதனால் இதுவரை சீனா-தைவான் உரசல் குறித்து இந்தியா வாய்திறக்கவில்லை. ஆனால் தற்போது நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

குற்றச்சாட்டு
அதாவது "தைவான் கடற்பகுதியில் முதலில் பதற்றத்தை தொடங்கியது சீனாதான். சீனாதான் ராணுவமயமாக்கலில் முதலில் ஈடுபட்டது" என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் நடவடிக்கை குறித்து வெளிப்படையாக கருத்து கூறும் இந்தியாவின் முதல் அறிக்கை இது என சொல்லப்படுகிறது. ஏற்னெவே இந்தியாவின் எதிர்ப்பை மீறி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அந்நாட்டின் உளவு கப்பல் நிலை நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையின் மூலம் இந்தியா-சீனா உரசல் மேலும் ஒரு அடி முன்னோக்கி சென்றிருக்கிறது.

வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்?
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் சீனாவின் "ஒரே சீனம்" கொள்கையை இந்தியா ஆதரிக்கிறதா என கேள்வியெழுந்த நிலையில், "இந்தியாவின் கொள்கைகள் நன்கு அறியப்பட்டவை மற்றும் நிலையானவை. எனவே இதனை மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை" என்று இந்தியா தரப்பில் கருத்து கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த கொள்கைக்கு மாறான வகையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? எனும் கேள்வி மேலெழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications