'மாபெரும் சாதனை..' ஒரே நாளில் 1.28 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி.. ஒரு வாரத்தில் 2ஆவது முறை!
டெல்லி: இன்று 2ஆவது முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போட்டு இந்தியா மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இன்று மாலை வரையில் மட்டும் சுமார் 1.28 கோடி பேருக்கு கொரோனா வேக்சின் போடப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் கொரோனா வைரசை வெல்ல வேக்சின் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் உலகின் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளுக்கே முக்கியதும் கொடுத்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரைக் கடந்த ஜனவரி மாதம் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் படிப்படியாக அனைவருக்கும் வேக்சின் போட அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசி
வேக்சின் பணிகளுக்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக், மாடர்னா, ஜான்சன் ஆகிய வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது வரை பெரும்பாலும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளே அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்றப்படி வேக்சின் உற்பத்தி இல்லாமல் இருந்ததால், 2ஆம் அலை ஏற்பட்ட போது தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் வேக்சின் போடும் பணிகளும் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டன.

1.28 கோடி பேருக்கு வேக்சின்
வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் வேக்சின் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது தடுப்பூசி உற்பத்தியும் அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் மின்னல் வேகத்தில் வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று 2ஆவது முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போட்டு இந்தியா மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. கோவின் தளத்தில் உள்ள தகவலின்படி மாலை வரை இந்தியாவில் 1.28 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் 2ஆவது முறை
முன்னதாக கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி, ஒரே நாளில் 1,08,99,699 பேருக்கு வேக்சின் போடப்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போட்டு இந்தியா மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. இன்று ஒரே நாளில் 1.28 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதன் மூலம், கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி படைத்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் வாழ்த்து
ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சிந் போடப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத் துறை ஊழியர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அதிக அளவிலான மக்களுக்கு இன்று வேக்சின் போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1 கோடி பேருக்கு வேக்சின் என்பது ஒரு முக்கியமான சாதனை. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கும் இதை சாத்தியப்படுத்திய சுகாதார ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள்" என அவர் பதிவிட்டுள்ளார்.
|
65 கோடி டோஸ் வேக்சின்
இந்தியாவில் இதுவரை 65 கோடி டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதால் வரும் காலங்களில் வேக்சின் பணிகள் மேலும் அதிகரிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய கொள்கையின்படி நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசிகளில் 75%-ஐ மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக அளித்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications