இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது.. அமெரிக்க முன்னாள் அதிகாரியுடன் ராகுலின் வைரல் உரையாடல்!
இந்தியாவில் சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி மற்றும் பேராசிரியர் நிகோலஸ் பர்ன்சிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி மற்றும் பேராசிரியர் நிகோலஸ் பர்ன்சிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது வரிசையாக பல்வேறு முக்கிய அறிஞர்கள், வல்லுனர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடி வருகிறார். இந்தியாவில் நடக்கும் பிரச்சனைகள், லாக்டவுன், கொரோனா பரவல், பொருளாதார சரிவு என்று பல விஷயங்கள் குறித்த ராகுல் காந்தி உரையாடி வருகிறார்.
முன்னதாக அவர் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்று பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி ஆகியோருடன் பேசினார். அதன் ஒரு கட்டமாக அவர் அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை அதிகாரி மற்றும் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் நிகோலஸ் பர்ன்சிடம் ராகுல் காந்தி உரையாடினார்.
கொரோனாவால் பலியானவர்களை விலங்குகளை போல நடத்துகிறீர்கள்.. டெல்லிக்கு குட்டு வைத்த சுப்ரீம் கோர்ட்
என்ன பேசினார்
ராகுல் காந்தி தனது பேச்சில், இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. இந்தியாவின் பன்முகத்தன்மை மோசமாகி வருகிறது. இந்த நாட்டின் ஒற்றுமை போக தொடங்கி உள்ளது. நாங்கள் மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருந்தோம். எங்களின் டிஎன்ஏவிலேயே சகிப்புத்தன்மை இருந்தது.
இப்போது இல்லை
நாங்கள் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு இருந்தோம். ஆனால் இப்போது அதெல்லாம் காணாமல் போய்விட்டது. டிஎன்ஏவில் இருந்த அந்த ஒற்றுமைக்கான குணம் காணாமல் போய்விட்டது. எனக்கு இது பெரிய கவலை அளிக்கிறது. நான் இந்த நாட்டில் முன்பு பார்த்த சகிப்புத்தன்மை இப்போதெல்லாம் இல்லை. அமெரிக்காவிலும் அப்படி இல்லை.
அமெரிக்கா நிலை
அமெரிக்காவிலும் நிலைமை மோசமாகி வருகிறது. அமெரிக்காவில் கருப்பின மக்கள், மெக்சிகோ மக்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இந்தியாவில் இந்து - இஸ்லாமிய பிரிவினையை ஏற்படுத்திவிட்டார்கள். இது இந்தியாவின் கட்டமைப்பை குலைக்க தொடங்கி உள்ளது. தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் அதே கூட்டம்தான் இந்தியாவின் கட்டமைப்பை உடைத்து வருகிறது.
சீனா இல்லை
இந்தியா சீனாவை போல சர்வாதிகார நாடு கிடையாது. ஆனால் இப்போது இங்கே சுதந்திரம் குறைத்து வருகிறது. நாம் சகிப்புத்தன்மை கொண்ட நாடாக இருந்தோம். அமெரிக்கா - இந்தியா இடையிலான ஒற்றுமை என்பதே சகிப்புத்தன்மைதான். ஆனால் தற்போது இரண்டு நாட்டிலும் அந்த பண்பு காணாமல் போய்விட்டது. மக்கள் கொரோனா தாக்குதலுக்கு பின்தான் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர தொடங்கி உள்ளனர், என்று ராகுல் காந்தி பேசி இருக்கிறார் .