இந்தியா: ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,000-த்தை தாண்டியது! 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு தொற்று உறுதி!
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,134 ஆக பதிவாகி உள்ளது.
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 1,000-த்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் இந்தியாவில் 699 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேரத்தில் நாட்டில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் விகிதமான 0.7%-ல் இருந்து 1.9% ஆக அதிகரித்துள்ளது. வாராந்திர கொரோனா தொற்று பரவல் விகிதம் 0.98% ஆக உள்ளது.
நாட்டில் டெல்லியில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. டெல்லியில் கொரோனா பரவல் விகிதம் 5.83% ஆக உள்ளது. முன்னதாக திங்கள்கிழமையன்று 34 பேருக்கு டெல்லியில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 682,715,331. உலகம் முழுவதும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,821,190. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 655,686,679. உலக நாடுகளில் நேற்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 80,612 . இதில் தென்கொரியாவில் மட்டும் 12,016 பேருக்கு நேற்று மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள்- ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 7026. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் குணமடைந்தவர்கள் 44160279. இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 530813.
இந்தியாவில் நேற்று காலை 8 மணிவரை 220.65 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.20 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.86 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 7,463 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடனான 24 மணி நேரத்தில் 435 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,41,59,617 பேர்.












Click it and Unblock the Notifications