இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைவு- 38,628 பேருக்கு தொற்று- லேசாக அதிகரித்த மரணங்கள்!
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 38,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 617 பேர் நேற்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் அதி உச்சமாக 1,30,706 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் ஒரே நாளில் 750 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரேசில், இந்தோனேசியாவில் அதிக பாதிப்புகள் பதிவாகின. இந்தோனேசியாவில் 1,635 பேரும் பிரேசிலில் 1,006 பேரும் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு சற்று லேசாக குறைந்திருக்கிறது.

சற்று குறைந்த ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் இதுவரை 47.83 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 38,628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,18,95,385 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 617 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,27,371. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 40,017. மொத்தமாக நாட்டில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,10,55,681. இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீள்வோர் விகிதமானது 97.37% ஆக உள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,12,153.

கேரளாவில் அதிக பாதிப்பு
நாட்டிலேயே கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கேரளாவில் நேற்று மட்டும் 19, 948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் இது 51.64%. மகாராஷ்டிராவில் 5,539 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆந்திராவில் 2,209 பேருக்கும் தமிழ்நாட்டில் 1985 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒடிஷாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. ஒடிஷாவில் கடந்த் 24 மணிநேரத்தில் 1,208 பேருக்கு பாதிப்பு உறுதியானது. வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அஸ்ஸாமில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மணிப்பூரில் 742, மேகலாயாவில் 515, திரிபுராவில் 245 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. மிசோரம் மீது அஸ்ஸாம் அறிவிக்கப்படாத பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் மிசோரமில் மருந்துகள் உள்ளிட்டவை கிடைப்பது போராட்டமாக உள்ளது. மிசோரம் மாநிலத்தில் நேற்று 725 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவானது. அருணாச்சல பிரதேசத்தில் 227 பேருக்கும் நாகாலாந்தில் 110 பேருக்கும் சிக்கிமில் 126 பேருக்கும் கொரோனா பதிவாகி இருக்கிறது. லடாக் யூனியன் பிரதேசத்தில் 9 பேருக்கும் லட்சத்தீவில் 8 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா மரணங்கள்
நாட்டில் கொரோனா மரணங்களில் மகாராஷ்டிரா, கேரளாவில் அதிகபட்சமாக தலா 187 பேர் நேற்று உயிரிழந்தனர். கர்நாடகாவில் 36, தமிழகத்தில் 30, டெல்லியில் 5 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.

கொரோனா தடுப்பூசிகள்
நாடு முழுவதும் இதுவரை 50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 49,55,138 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. நாடு முழுவதும் மொத்தம் 50,10,09,609 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியது. இது தொடர்பாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், கொவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போருக்கு வலுவான உத்வேகம் கிடைத்துள்ளது. தடுப்பு மருந்து வழங்கல் எண்ணிக்கை 50 கோடியை கடந்துள்ளது. இதை மேலும் அதிகரித்து, 'அனைவருக்கும் இலவச தடுப்பூசி' திட்டத்தின் கீழ் நமது மக்கள் தடுப்பு மருந்து பெறுவதை உறுதி செய்ய நம்பிக்கையுடன் உள்ளோம் என பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications