மின்னல் வேகம்.. வெறும் 4 நாட்களில் 2.5 மடங்கு உயர்ந்த கொரோனா.. ஓமிக்ரான் பரவலும் இரட்டிப்பானது
டெல்லி: நாட்டில் ஓமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில். வைரஸ் பரவல் வேகம் குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளது. வைரஸ் பாதிப்பு பல வாரங்களுக்குப் பிறகு மீண்டும் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது.
என்னாச்சு.. தமிழகத்தில் சதம் அடித்த ஓமிக்ரான் வைரஸ்.. மேலும் 74 பேருக்கு பாதிப்பு உறுதி!
உயரும் கொரோனா
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 16,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது கடந்த செவ்வாய்க்கிழமை வெறும் 6,358 ஆக இருந்தது. கடந்த புதன்கிழமை மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,195 ஆக உயர்ந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இது 13,154ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 4 நாட்களில் மட்டும் வைரஸ் பாதிப்பு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது.
திடீர் வேகம்
நாட்டில் வைரஸ் பாதிப்பு இப்போது தான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏனென்றால் இதற்கு முன்பு, கடந்த டிசம்பர் 15இல் 6,984 முதல் 25 வரையிலும் கூட நாட்டின் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் என்ற விகிதத்திலேயே இருந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் தற்போது திடீரென கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. திடீரென வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமிக்ரான் கேஸ்கள்
இதேபோல், புதிய உருமாறிய கொரோனா வகையான ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கையும் கடந்த சில தினங்களாக மேல் நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த டிச. 28 முதல் மட்டும் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த டிச.2ஆம் தேதி தான் இந்தியாவில் முதல் ஓமிக்ரான் பாதிப்பு உறுதியானது. அன்றைய தினம் பெங்களூருவில் 2 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்ட மொத்தம் 15 நாட்கள் ஆனது. இருப்பினும், அதன் பின்னர் வைரஸ் பரவல் வேகமெடுத்ததுள்ளது.
இரட்டிப்பு
கடந்த டிசம்பர் 21இல் ஓமிக்ரான் கேஸ்களின் 200-ஐ தாண்டியது. அதன் பிறகு வெறும் 2 நாட்களில், ஓமிக்ரான் கேஸ்கள் 358ஆகவும் டிச. 27இல், இது 578 ஆகவும் உயர்ந்தது. அதற்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை, அதாவது டிச. 28இல் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஓமிக்ரான் கேஸ்கள் 653 ஆக இருந்த நிலையில், டிச.31இல் இது 1,270 ஆக உயர்ந்துள்ளது. அதாவது சராசரியாக 2 நாட்களுக்கு ஒரு முறை ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது.
ஆக்டிவ் கேஸ்கள்
இதற்கிடையில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால், இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களில், மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் சுமார் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த டிச. 28இல் 75,456 ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், டிச். 31இல் 91,361 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
சுகாதார வல்லுநர்கள்
வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சிக்கை விடுத்துள்ள சுகாதார வல்லுநர்கள், இது தொடர்பாகத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைக்கவும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.