செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றவில்லை - புகைப்படத்துடன் நிரூபணம்
டெல்லி: செங்கோட்டையில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றி, சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியதாக வெளியான செய்தி தவறு என்று நிரூபணமாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தினமான இன்று, சுமார் இரண்டு லட்சம் விவசாயிகள் டிராக்டர் மூலம் பேரணியில் ஈடுபட்டனர்.

ஆனால், அனுமதியை மீறி, தடுப்புகளை உடைத்து சில விவசாயிகள் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டனர்.
அப்போது, செங்கோட்டையில் வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தேசியக் கொடியை அகற்றிவிட்டு, சீக்கிய கொடியை ஏற்றியதாக பல்வேறு ஆங்கில சேனல்களில் செய்திகள் ஒளிபரப்பானது.
அதற்கேற்றாற்போல், அந்தந்த சேனல்கள் வாயிலாக வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது. ஆனால், தேசியக் கொடி அகற்றப்பட்டதாக ஆங்கில சேனல்கள் வெளியிட்ட செய்தி தவறு என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
உண்மையில், வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் கொடிக் கம்பத்தில் தேசிய கொடி கம்பீரமாக பறந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், சிறிய கொடிக் கம்பத்தில் தான் அவர்கள் Nishan Sahib எனும் சீக்கியர்களின் புனித கொடியை ஏற்றியுள்ளனர்.












Click it and Unblock the Notifications