இந்தியாவில் உச்சம் தொடும் வேலைவாய்ப்பின்மை.. புட்டு புட்டு வைத்த சிஎம்ஐஇ புள்ளி விவரம்.. இதை பாருங்க
டெல்லி: நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஒரே மாதத்தில் 8.3 சதவீதமாக அதிகரித்திருப்பதாக இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ளது.
நாட்டில் வேலைவாய்ப்பு சதவீதம் பெருகி இருப்பதாக பாஜக கூறிய அடுத்த நாளே, இப்படியொரு புள்ளிவிவரம் வெளியாகியிருப்பது அக்கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா தற்போது எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்களில் முதன்மையாக இருப்பது வேலைவாய்ப்பின்மை பிரச்சினை. இளங்கலை, முதுகலை படித்த பட்டதாரிகள் கூட வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பதை தற்போது நம்மால் பார்க்க முடிகிறது.
உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ப்யூன் பணியிடங்களுக்கு 3,700 பிஎச்டி (முனைவர் பட்டம்) பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தது நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை வெளிச்சம் போட்டு காட்டியது.
வைகை அணையில் 4,000 கனஅடி தண்ணீர் திறப்பு.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
பாஜக சொன்னது என்ன?
வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், அது முழுமையாக பலனளிக்கவில்லை. குறிப்பாக, கொரோனா ஊரடங்கால் கோடிக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோனதும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சினை இப்படி இருக்கும் போது, பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஜாஃபர் இஸ்லாம் ஒரு தகவலை கூறினார். அதாவது, நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும், தனிநபர் செலவினம் 26 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒரிஜினல் ரிப்போர்ட்
மேலும், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த சிறப்பான முடிவுகளால் 2022-23-ம் நிதியாண்டில் சர்வதேச ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 25 சதவீதம் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவின் இந்த தகவலை பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பு சதவீதம் குறித்து சிஎம்ஐஇ இன்று ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஜூலையுடன் ஒப்பிடுகையில், ஒரே மாதத்தில் அதாவது ஆகஸ்ட்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பு விகிதம் குறைவு
அதன்படி, ஜூலையில் 6.8 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆகஸ்ட்டில் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.6 சதவீதமாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.7 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. கிராப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த ஜூலை மாதம் 6.1 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. ஒரே மாதத்தில் அது 7.7 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம் 37.6 சதவீதத்தில் இருந்து 37.3 சதவீதமாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நாட்டிலேயே வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகம் இருக்கும் மாநிலங்களில் ஹரியானா முதலிடத்தில் உள்ளது.
ப.சிதம்பரம் கருத்து
அங்கு வேலைவாய்ப்பின்மை விகிதம் 37.3 சதவீதமாக இருக்கிறது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஜம்மு - காஷ்மீர் (32.8%), ராஜஸ்தான் (31.4%), ஜார்க்கண்ட் (17.3%), திரிபுரா (16.3%) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், "நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாக பாஜக கூறிய அடுத்தே நாளே, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ தெரிவித்திருக்கிறது. நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 9 சதவீதமாக உயர்ந்திருக்கிறது" என அவர் கூறியுள்ளார்.