கொரோனா.. மே மத்தியில் கோவிட் கேஸ்கள் 48 லட்சமாக உயரும் அபாயம்.. ஐஐடி
டெல்லி: கொரோனா 2வது அலை மே மாத மத்தியில் உச்சத்தைத் தொடும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில், மே மத்தியில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 48 லட்சம் வரைக்கும் போகும் என்ற அபாயகரமான தகவலை கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது.
மே 14 -18 தேதிகளுக்கு இடையிலான கால கட்டத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையானது 38 லட்சம் முதல் 48 லட்சமாக இருக்கும் என்றும் ஐஐடி கணித்துள்ளது. தினசரி பாதிப்பானது மே 4-8 காலகட்டத்தில் 4.4. லட்சமாக இருக்கும் என்றும் ஐஐடி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இன்று ஒரே நாளில் இந்தியாவில் புதிதாக 3.52 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 2812 பேர் உயிரிழந்தஉள்ளனர். ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது.
சூத்ரா (SUTRA) அதாவது சந்தேகத்திற்குரியோர், தொற்று கண்டறியப்படாதோர், பாசிட்டிவ் ஆனவர்கள் உள்ளிட்டோரை வைத்து நடத்தப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் இந்த புதிய கணிப்பை ஐஐடி விஞ்ஞானிகள் வெளியிட்டஉள்ளனர்.
தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கொரோனா பாதிப்பு.. 13 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!
கடந்த வாரம் வெளியிடப்பட்ட கணிப்பில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 33 முதல் 35 லட்சமாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கையை விஞ்ஞானிகள் அதிகரித்துள்ளனர். நோய்ப் பரவல் கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.
இதுகுறித்து கான்பூர் ஐஐடியின் கம்ப்யூட்டர் அறிவியல், பொறியியல் பிரிவு தலைவர் மணீந்தர் அகர்வால் கூறுகையில், நாங்கள் கணித்துள்ள அளவுக்குள்தான் நிச்சயம் பாதிப்புகள் இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
மே 15ம் தேதி 2வது அலை இந்தியாவில் உச்சத்தைத் தொடும் என்று ஏற்கனவே நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன் பின்னர் நோய் பாதிப்பு படிப்படியாக குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.