வீரமரணம் அடைந்த முதல் அக்னிவீர்.. குடும்பத்துக்கு லட்சக்கணக்கில் நிவாரணம்! விரிவாக விளக்கிய ராணுவம்
டெல்லி: அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்தில் ஒப்பந்த பணிக்கு சென்ற அக்னிவரர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அளிக்கப்படும் நிவாரண உதவிகள் தொடர்பாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்து இருக்கிறது.
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த அக்னிபாத் ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்தின் மூலம் அக்னிவீராக தேர்வு செய்யப்பட்ட கவாதே அக்ஷய் லட்சுமன் சியாச்சின் சிகரத்தில் நேற்று பணியின்போதே வீர மரணம் அடைந்தார். ராணுவ பணியின்போது உயிரிழந்த முதல் அக்னிவீர் அக்ஷய் லட்சுமன். இந்த உடலுக்கு நேற்று இந்திய ராணுவ மரியாதை கொடுத்தது. இந்த நிலையில் ராணுவ வீரர்கள் வீர மரணம் அடையும்போது அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரணம்போல் அக்னிவீர்களுக்கு கிடைக்குமா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இந்தியாவின் வீரர் உள்ளங்களை அவமதிப்பதற்காக கொண்டு வரப்பட்டதே இந்த அக்னிவீர் திட்டம். இதன் மூலம் பணியில் சேர்ந்த வீரமரணம் அடையும் வீரர்களுக்கு ஓய்வூதியம், நலத்திட்டங்கள், குடும்பங்களுக்கு நிவாரணம் என எதுவும் வழங்கப்படாது" என்று தெரிவித்தார். இதனை பாஜக மறுத்து விளக்கம் அளித்து இருந்தது.
இந்த நிலையில், அவரது மரணம் தொடர்பாகவும், அவரது குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரணம் குறித்தும் இந்திய ராணுவம் தற்போது விளக்கம் அளித்து உள்ளது. அதில், "சியாச்சினில் பணியில் இருந்தபோது அக்னிவீர் (ஆபரேட்டர்) கவாதே அக்சய் லட்சுமன் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினரின் துக்கத்தில் இந்திய ராணுவமும் பங்கெடுக்கிறது. அக்னிவீர் பணிக்கான ஒப்பந்தத்தில் பணியின்போது உயிரிழக்கும் வீரர்களுக்கு பங்களிப்பற்ற காப்பிட்டுத் தொகை ரூ.48 லட்சம் வழங்கப்படும்.

அக்னிவீரர்களுக்கான 30% சேவா நிதியுடன், அரசாங்கம் வழங்கும் நிவாரணம் மற்றும் அதற்கான வட்டி என ரூ.44 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும். உயிரிழந்த நாளில் இருந்து அக்னீவீரரின் 4 ஆண்டுகால பணி ஒப்பந்தம் முடிவடையும் வரையிலான நிலுவைத் தொகை (ரூ.13 லட்சத்துக்கு மேல்) உடனடியாக வழங்கப்படும். ஆயுதப் படையினர் போரின்போது உயிரிழந்தால் வழங்கப்படும் விபத்துகளுக்கான நிதியிலிருந்து ரூ.8 லட்சம் வழங்கப்படும். ராணுவ மனைவிகள் நல சங்கம் எனப்படும் (AWWA) நிதியில் இருந்து ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications