வருமான வரி விலக்கு.. அது என்ன 3 லட்சம், 7 லட்சம்? நிர்மலா அறிவிப்பால் குழம்பிய மக்கள்.. இதோ விளக்கம்
தனி நபர் வருமான வரி விலக்கு தொடர்பாக மக்களிடையே எழுந்த குழப்பங்களுக்கு பிறகு, அது தொடர்பான தெளிவான விளக்கங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. இதோ பட்ஜெட் தாக்கலின்போது இருந்த சூழ்நிலையை விளக்குகிறது இந்த செய்திக்குறிப்பு.
டெல்லி: புதிய வருமான வரி தொடர்பான நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் அறிவிப்பால் சம்பளதாரர்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகினர். என்னாச்சு, யாருக்கு சலுகை என்ற கேள்விகள் எல்லா இடங்களிலும் எதிரொலித்தன. ஆனால், ஒருவழியாக இப்போது மக்களுக்கு தெளிவு ஏற்பட்டுள்ளது.
பட்ஜெட் உரையின்போது.. நிர்மலா சீதாராமன் தனி நபர் வருமான வரி தொடர்பான வாக்கியங்களை படிக்கும் முன்பாக சில வினாடிகள் உரையை நிறுத்தி அனைவரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தார். ஏனெனில் இது சம்பளதாரர்களின் பல வருட கோரிக்கை அதை நாம் நிறைவேற்றவில்லை என்பதை உணர்ந்திருந்தார். பிறகு உரையை தொடர்ந்தபோது, அவரும் இதை ஆமோதித்தார். நீங்கள் எதிர்பார்த்திருந்த விஷயத்திற்கு நான் வருகிறேன் என்ற ஒரு முன்னுரை விளக்கத்தோடுதான் அவர் அதை அறிவித்தார்.
இதன்படி, புதிய வருமான வரி பிரிவை தேர்வு செய்த தனி நபர்களுக்கு 7 லட்சம் வரை ரிபேட்டுடன் (Tax rebate) கூடிய வரி விலக்கு என அவர் அறிவித்தார். பின்னர் அவர், 3 லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு வழங்கப்படுவதாகவும் கூறினார். முன்பு இது 2.50 லட்சம் என்பதாக இருந்தது. இதுதான் குழப்பங்களுக்கு காரணம். 3 லட்சம் வரை வருமான வரி விலக்கு என்கிறார், 7 லட்சத்தையும் குறிப்பிடுகிறார். அப்படியானால் 3 லட்சம் வரை பழைய வருமான வரி தாக்கலை தேர்வு செய்தவர்களுக்கும் 7 லட்சம் வரையிலான சலுகை புதிய வருமான வரி பிரிவை தேர்வு செய்தவர்களுக்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.
இது தொடர்பான ஒன்இந்தியாதமிழ் பல வல்லுநர்களிடம் பேசியபோது தெரிந்த உண்மை இதுதான். மத்திய அரசு பழைய வருமான வரி பிரிவை தேர்வு செய்தவர்களுக்கு எந்த சலுகையும் தரவில்லை. நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டது அனைத்துமே புதிய வருமான வரி பிரிவின் கீழ் வருமான வரி தாக்கல் செய்வோருக்கு மட்டுமே. அனைத்து மக்களையும் புதிய பிரிவின் கீழ் இழுக்க வேண்டும் என்ற திட்டமும் இதில் உள்ளதாம்.
பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இப்போது இந்த புதிய வரி விதிப்பு முறையில்தான் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால்
உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் .
300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் .
600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும்
900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும்
1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும்
15 above வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் .
புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது. ஆனால் நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும்.
உங்களுக்கு ஆண்டு வருமானம் 9 லட்சம் என்றால் புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 45,000 ரூபாய் ஆக இருக்கும். உங்களுக்கு 10 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் என்றால் புதிய பட்ஜெட்டின் படி வருடாந்திர வருமான வரித் தொகை : 60,000 ரூபாய் ஆக இருக்கும்.
புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும். புதிய வருமான வரி விதிப்பு முறையில் பல அதிரடி சலுகைகள் கொண்டு வரப்பட்டு உள்ளது போல தோன்றினாலும் இதில் விலக்குகள் எதுவும் கிடையாது. அதே சமயம் பழைய வருமான வரி விதிப்பு முறையில் அப்படி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.