இந்திய பொருளாதார சரிவு.. கொரோனாவை விட மோசமாக இருக்கும்.. அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை!
கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு பணம்தான் தேவை, கடன் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கொரோனாவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களுக்கு பணம்தான் தேவை, கடன் இல்லை என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா காரணமாக இந்திய பொருளாதாரம் முடங்கி உள்ளது. அதேபோல் கொரோனா காரணமாக கொண்டு வரப்பட்டுள்ள ஊரடங்கு இந்தியாவின் பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதித்துள்ளது.
இந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய பொருளாதார திட்டங்களை அறிவித்து வருகிறார்.

ராகுல் காந்தி என்ன பேசினார்
மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். zoom மூலம் வீடியோ கான்பிரன்ஸில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், மக்கள் கையில் பணம் சேர வேண்டும். அதுதான் இப்போது அரசுக்கு ஒரே இலக்காக இருக்க முடியும். ஒரு அம்மா தனது குழந்தைக்கு சாப்பாடு கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்வார். அப்படித்தான் இந்த அரசு செயல்பட வேண்டும்.

மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும்
மக்களுக்கு உணவு கிடைக்க அரசு கடுமையாக முயற்சிக்க வேண்டும். அரசு நேரடியாக மக்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்த வேண்டும். நாம் அதை செய்யவில்லை என்றால் அது பெரிய அழிவாக வரும். ஏழைகளின் வங்கி கணக்கிற்கு பணம் சென்று இருக்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டங்களை மீண்டும் ஏற்படுத்தி, அதை 200 நாளாக அதிகரிக்க வேண்டும்.

கடன் கொடுக்கும் அரசு
அரசு கடன் கொடுக்கும் வங்கிகள் போல செயல்பட கூடாது. மாறாக நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். உடனே பொருட்களுக்கான, சந்தைக்கான தேவையை உருவாக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனாவை விட மிக மோசமான பாதிப்பாக பொருளாதார சரிவு இருக்கும். நாம் மக்கள் கையில் பணத்தை கொண்டு சேர்க்கவில்லை என்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்கு வராது.

கவனமாக இருக்க வேண்டும்
அதேபோல் லாக்டவுனை நீக்கும் போது மிகவும் கவனமாக நீக்க வேண்டும். முக்கியமாக வயதான நபர்கள், பெண்கள் பலியாகாமல் லாக்டவுனை நீக்க வேண்டும். மத்திய அரசு இதற்கு சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். அரசுக்கு நாங்கள் அறிவுரை வழங்க தயாராக இருக்கோம். அரசு எங்கள் கோரிக்கைகளை கருத்தில் கொண்டால் நன்றாக இருக்கும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications