அமைதிக்கான நோபல் பரிசு.. இந்திய பத்திரிகையாளர்கள் முஹம்மது ஜுபைர், பிரதிக் சின்ஹா பெயர் பரிந்துரை
டெல்லி: 2022 ஆம் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் முஹம்மது ஜுபைர் மற்றும் அவரது நண்பர் பிரதிக் சின்ஹா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன.
சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி ஒன்றில் இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.
நுபுர் ஷர்மாவின் இந்த சர்ச்சை கருத்தை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஆல்ட் நியூஸ் ஆசிரியரும் பத்திரிகையாளரும் முஹம்மது ஜுபைர் என்று கூறப்படுகிறது.

ஆல்ட் நியூஸ்
ஆல்ட் நியூஸ் என்ற உண்மை செய்திகளை கண்டறியும் இணையதளத்தை தன்னுடைய நண்பர் பிரதிக் சின்ஹாவுடன் இணைந்து இவர் நடத்தி வருகிறார். நுபுர் ஷர்மாவின் பேச்சு தொடர்பாக தனது ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் முதன்முதலில் செய்தி வெளியிட்ட அவர், தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் எழுந்தன.

வழக்குப்பதிவு
தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதத்தில் பகிரப்படும் பொய்யான செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து வெளியிட்டு வந்த ஜுபைர் ட்விட்டரில் தனது கருத்துக்களையும் தெரிவித்து வந்தார். சாமியார்கள் மாநாட்டில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என பேசியதற்காக கடும் விமர்சனங்களை முன்வைத்த ஜுபைர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடும் கண்டனம்
இதுகுறித்து பன்னாட்டு பத்திரிகையாளர் அமைப்பான CPI (Committee to Protect Journalists) அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. CPI வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை ட்விட்டரில் பகிர்ந்துள்ள அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்டின் ஊடக பாதுகாப்புக்குழு, "பத்திரிகைத்துறை ஒன்றும் குற்றமில்லை" என்று பதிவிட்டது.

நோபல் பரிசு
இந்த நிலையில், தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் முஹம்மது ஜுபைர் மற்றும் பிரதிக் சின்ஹா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச இதழான டைம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications