புதுவகை கொரோனா வைரசை பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம்- ஹர்ஷ் வர்தன்
டெல்லி: இங்கிலாந்தில் புதுவகையான கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது குறித்து அரசுக்கு தெரியும் என்றும், முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து உள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வரும் காரணத்தால் ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை துண்டித்து உள்ளன. சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து இத்தாலி சென்ற பயணி ஒருவரிடம் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இருப்பது கண்டறியப்பட்டதால் இத்தாலியில் பரபரப்பு நிலவுகிறது. அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.

இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதால் கட்டுப்படுத்துவது கஷ்டம் என்கிறது இங்கிலாந்து சுகாதாரத் துறை வட்டாரம். இந்த நிலையில்தான் இந்தியாவில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதன் பிறகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில், புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவல் குறித்த செய்திகளால் பொதுமக்கள் பீதியடைய தேவை கிடையாது. அரசும் முழு அளவில் தயார் நிலையில் இருக்கிறது. கடந்த ஒரு வருடமாக அனைத்து வகையான தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து மக்களை காப்பாற்றுவதற்காக முழு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
எந்த மாதிரியான முன்னெச்சரிக்கைகளை எடுத்து நோய் பரவலை குறைக்க வேண்டும் என்பதை அரசு அறிந்துள்ளது. எனவே மக்கள் பயப்படாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு.. குறிப்பாக, டெல்லிக்கு வரக்கூடிய விமானங்கள் அனைத்திற்கும் உடனடியாக மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதன் மூலம் புதிய வகை கொரோனா வைரஸ் டெல்லியில் பரவுவதை தடுக்க வேண்டும் என்பது கெஜ்ரிவால் கோரிக்கை.












Click it and Unblock the Notifications