இந்திய தடுப்பூசி கோவாக்சின்.. இரட்டை மரபணு மாறிய கொரோனாவை கட்டுப்படுத்துகிறது.. அமெரிக்கா தகவல்
டெல்லி: இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் இரட்டை மரபணு மாறிய கொரோனா வகைக்கு எதிராக கோவாக்சின் நல்ல பலன் அளிப்பதாக அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது தடுப்பூசி செலுத்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசிகளே செலுத்தப்படுகிறது.
இந்நிலையில், பாரத் பயேடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் இரட்டை மரபணு மாறிய வைரசுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக அமெரிக்காவின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

இரட்டை மரபணு மாறிய கொரோனா
இது குறித்து ஆண்டனி பவுசி கூறுகையில், நாங்கள் கொரோனா தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். தற்போது எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை மரபணு மாற்றமடைந்த B.1.617 கொரோனா வகைக்கு எதிராக கோவாக்சின் நல்ல பலன் அளிக்கிறது. இந்திய வகை கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாகச் செயல்படுகிறது என்றார்.

கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது
மேலும், இந்தியாவில் கொரோனா பரவல் தற்போது மிக மோசமாக உள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முக்கியமானதாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முன்னதாக இதே கருத்தைத்தான் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் வெளியிட்டிருந்தது. கோவாக்சின் தடுப்பூசிகள் மூலம் மரபணு மாறிய வைரஸ் கட்டுக்குள் வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்திய தடுப்பூசி
கோவாக்சின் தடுப்பூசி முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து ஐசிஎம்ஆர் இந்த கோவாக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. மருத்துவம் பரிசோதனைகளில் கோக்சின் 78% பலன் அளிப்பது தெரியவந்தது. இந்த கோவாக்சின் தடுப்பூசியைத் தான் பிரமதர் மோடி எடுத்துக் கொண்டார்.

இரட்டை மரபணு மாற்றம் என்றால் என்ன
இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனா என்று அழைக்கப்படும் B.1.617 கொரோனா வகை இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கண்டறியப்படும் மொத்த கொரோனா பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா பாதிப்பே கண்டறியப்படுகிறது. இரட்டை மரபணு மாறிய வைரஸ் என்பது இரண்டு வகையான மரபணு மாற்றத்தை ஒரே வைரஸ் கொண்டிருப்பதாகவும்.

உலக சுகாதார அமைப்பு
இரட்டை மரபணு மாறிய வைரஸ் இதுவரை 17 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசி எந்தளவு லாவகமாகப் பரவுகிறது. எனத் தெரியவில்லை என்றாலும் இது குறித்துக் கூடுதல் ஆய்வுகள் உடனடியாக தேவை என்றும் கூறியுள்ளது. மேலும், இரட்டை மரபணு மாறிய கொரோனா வகையை 'கவனத்தில் கொள்ள வேண்டிய கொரோனா வகை என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications