டிரம்ப் பதவியேற்பு விழா! இந்தியா சார்பில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு! ஹெச் 1 பி விசா என்னவாகும்?
டெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் அடுத்த வாரம் அதிபராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்க உள்ளார். இதற்கிடையே இந்த நிகழ்வில் இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள ஜெய்சங்கர், டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்த உள்ளார்.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று இருந்தார். தேர்தலில் அவர் வென்று இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் அவர் அதிகாரப்பூர்வமாக அதிபராகப் பதவியேற்கவில்லை.

அமைச்சர் ஜெய்சங்கர்
அந்நாட்டு சட்டப்படி எப்போதும் தேர்தலுக்கு 2.5 மாதங்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 20ம் தேதி தான் அதிபராகப் பதவியேற்க முடியும். அதன்படி டிரம்ப் அடுத்த வாரம் அதிபராகப் பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். வரும் ஜனவரி 20ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
டிரம்ப்-வான்ஸ் பதவியேற்பை ஒருங்கிணைக்கும் குழு இதற்கான அழைப்பிதழை அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்தே ஜெய்சங்கர் இந்த விழாவில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர் பங்கேற்பது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனைக் கூட்டங்கள்:
இந்த பயணத்தில் பதவியேற்பு விழா மட்டுமின்றி டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள முக்கிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உடனும் ஆலோசனைக் கூட்டங்களை அமைச்சர் ஜெய்சங்கர் நடத்துவார் என தெரிகிறது. குறிப்பாக ஹெச் 1பி விசா தொடர்பாக முக்கிய ஆலோசனை நடக்கும் எனத் தெரிகிறது.
அமெரிக்காவில் இந்தியர்கள் ஹெச் 1பி விசா மூலம் அதிகம் பலன் பெறுகிறார்கள். இதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் கட்சியில் இருந்தே குரல்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
பங்கேற்பது யார்:
டிரம்ப் பதவியேற்பு விழாவில் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, பிரிட்டனின் வலதுசாரி கட்சியின் தலைவர் நைஜல் ஃபரேஜ், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் தகேஷி இவாயா, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். பிரேசில் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாஸ்போர்ட் பிரச்சனைகளால் அவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பது சந்தேகம் எனச் சொல்லப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், அவருக்குப் பதிலாகச் சீன அரசு சார்பில் உயர் அதிகாரி ஒருவர் இதில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20ம் தேதி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
டிரம்ப் திட்டம்:
இந்த முறை அதிபரான உடன் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான நடவடிக்கைகளை டிரம்ப் துரிதப்படுத்துவார் எனத் தெரிகிறது. தேர்தல் சமயத்திலேயே டிரம்ப் இது தொடர்பாகத் தான் தொடர்ச்சியாகப் பேசி வந்தார். இதனால் அவர் அதிபரான உடனேயே மெக்சிகோ மற்றும் கனடா எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக்கப்படும் எனத் தெரிகிறது. இது மட்டுமின்றி ஏற்கனவே சட்டவிரோதமாகக் குடியேறிய அமெரிக்காவில் தங்கியுள்ளவர்களையும் கூட நாடு கடத்த டிரம்ப் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications