வெற்றி தோல்வி சகஜம் தான்.. ஆனால் இப்படி பண்ணியிருக்க கூடாது.. இந்திய அணிக்கு கொட்டு வைத்த சசி தரூர்
டெல்லி: இந்தியா இங்கிலாந்து இடையேயான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா படு தோல்வி அடைந்தது. இதனால் பலரும் இந்திய அணியை விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்பியும், மூத்த தலைவருமான சசி தரூரும், இந்திய அணியை விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் பாகிஸ்தானோடு விளையாடும் என்று ரசிகர்கள் பலரும் காலையில் இருந்தே பரபரப்புடன் இருந்தனர்.
சமூக வலைத்தளங்களிலும் இன்றைய அரையிறுதி ஆட்டம் பற்றிய பதிவுகளே ஆக்கிரமித்து இருந்தது.
இந்தியா தோல்வி: 'மட்டமான ஆட்டம்' கே.எல்.ராகுலின் குடியுரிமையை பறிங்க.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
படுமோசமான பந்து வீச்சு
இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து இருந்தது. ஓரளவு கவுரமான ஸ்கோர் என்பதால் இங்கிலாந்து அணிக்கு கொஞ்சம் டஃப் கொடுத்து விளையாடி வெற்றியை சூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் பந்து வீச்சு படுமோசமாக இருந்தது. துவக்கத்தில் இருந்து எந்த ஒரு நெருக்கடியும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கொடுக்கவில்லை.
இந்திய அணியை ஊத்தித்தள்ளியது
இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹேல்சும் இந்தியாவின் பந்து வீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டனர். குறிப்பாக ஜோஸ் பட்லரின் பேட்டில் பட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரிகளுக்கு பறந்தன. மறுபுறம் ஹேல்ஸ் சிக்சராக விளாசினர். இவர்கள் ஆடிய ஆட்டம் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைந்து போனது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் இந்த ஜோடி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை ஊத்தித்தள்ளியது.
சசி தரூர் விமர்சனம்
அரையிறுதி ஆட்டத்தில் கொஞ்சம் கூட இங்கிலாந்து அணிக்கு சவால் அளிக்காமல் முற்றிலும் சரண் அடைந்தது ரசிர்கள் மத்தியிலும் கிரிக்கெட் விமர்சர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அரசியல் திரைப்பிரபலங்களும் இந்திய அணியின் தோல்வி குறித்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை போட்டு வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் தொகுதி எம்.பியுமான சசி தரூர், இந்திய அணி தனது முழுத்திறனுடன் விளையாடவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
போராடாமல் சரண் அடைந்து விட்டது
இது தொடர்பாக சசி தரூர் தனது ட்விட் பதிவில் கூறுகையில், ''இந்தியா தோல்வி அடைந்தது பெரிய விஷயம் அல்ல. அதை நான் பொருட்படுத்தவில்லை. வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம் தான். ஆனால், இந்திய அணி முழுத்திறனுடன் போராடாமல் சரண் அடைந்து விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
120 ரன்கள் எடுத்தால் கூட தோனியின் படை
அதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை திடீரென நெட்டிசன்கள் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். 120 ரன்கள் எடுத்தால் கூட தோனியின் படை வென்று விடும். ஆனால், தற்போதைய இந்திய அணி 168 ரன்கள் எடுத்தால் கூட வெற்றி பெற முடியாமல் தடுமாறுகிறது என்று பதிவிட்டு ரோகித் சர்மாவின் கேப்டன்சியை விமர்சித்து வருகின்றனர். இதனால், தோனி குறித்த பதிவுகளும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கொஞ்சம் கூட போராடாமல்..
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மண்ணைக்கவ்வியது. சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான அணிகளில் ஒன்றான இந்தியா முக்கிய போட்டியில் கொஞ்சம் கூட போராடாமல் படு தோல்வி அடைந்ததை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.