பவர்ஃபுல் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் கொண்டு தள்ளிய ஐஎன்எக்ஸ் வழக்கு.. பரபர நிகழ்வுகள்!
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது முதல் திகார் சிறைக்கு ப.சிதம்பரம் சென்றது வரை நடந்தது என்ன?
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது அந்நிய முதலீடு மேம்பாட்டுக் கழகத்தின் அனுமதி இல்லாமல் ரூ 307 கோடி பணபரிவர்த்தனை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்.
2007-ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவின் நிறுவனர்களான இந்திரா முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் ப.சிதம்பரத்தின் பதவியை பயன்படுத்தி கார்த்தி சிதம்பரத்துடன் சேர்ந்து இந்த முறைகேட்டை செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
2017-ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியாவில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரூ. 305 கோடி முதலீடு செய்ய அனுமதித்ததாக ப.சிதம்பரம், கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
ஜூன் 16- உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் மூலம் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
ஆகஸ்ட் 14- கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்ததை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஆகஸ்ட் 18- ஆகஸ்ட் 23-ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
செப்.11- கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாட்டில் உள்ள 25 சொத்துகள் குறித்தும் பணபரிமாற்றம் குறித்தும் சிபிஐ நடத்திய விசாரணை அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
செப். 22- வெளிநாட்டு வங்கிக் கணக்குகளை மூடுவதால் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதை அடுத்து உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அக். 9- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் தனது மகளுக்காக லண்டன் செல்ல உச்சநீதிமன்றத்திடம் கார்த்தி அனுமதி கேட்டார். மேலும் அங்கு தான் எந்த வங்கிக்கும் செல்ல மாட்டேன் என்ற உறுதியையும் அளித்தார்.
அக்.9 - பாஜக தலைமையிலான அரசு என் மீதும் என் மகன் மீதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்குகளை போடுவதாக சுப்ரீம் கோர்டில் ப சிதம்பரம் புகார் கூறினார்.
நவம்பர் 20- மகளின் கல்லூரி சேர்க்கைக்காக கார்த்தி சிதம்பரம் லண்டன் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
டிசம்பர் 8- ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஆஜராகுமாறு கார்த்திக்கு சிபிஐ அனுப்பிய சம்மனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
2018, ஜன.31- கார்த்தி சிதம்பரம் மற்றும் மற்றவர்களுக்கு எதிரான இரு லுக் அவுட் நோட்டீஸ்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பியது.
பிப்.16- இந்தியா மற்றும் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணத்தை பரிமாற்றம் செய்ய மூளையாக செயல்பட்டதாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
பிப். 28- கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் வெளிநாட்டு நிதியை முதலீடு செய்ய அந்நிய முதலீடு மேம்பாட்டுக் கழகத்தின் அனுமதியை பெற கார்த்தி சிதம்பரத்துக்கு 1 மில்லியன் டாலர் வழங்க ஒப்பந்தம் பேசப்பட்டது என சிபிஐயிடம் இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்தார்.
மார்ச் 23- 23 நாட்கள் கழித்து கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
ஜூலை 25- ப.சிதம்பரத்தை கைது செய்வதிலிருந்து உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அக். 11- ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி மூலம் கிடைத்த பணத்தில் இந்தியா, லண்டன், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
2019, ஜூலை 11- இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறினார். வழக்கு தொடர்பான உண்மைகளை வாக்குமூலமாக அளித்தார்.
ஆக.1- டெல்லியில் உள்ள ஜோர்பாக் வீட்டை முடக்கிவிட்டதால் அங்கிருந்து காலி செய்யுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டது.
ஆக. 20- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆக.21- ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் சினிமா பாணியில் கைது செய்தனர்
ஆக.22- சிபிஐ விசாரணைக்காக அவர்களது தலைமை அலுவலகத்துக்கு சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டார்.
ஆக.26 - ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருந்தார்.
ஆக.27- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை சிதம்பரத்தை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை.
ஆக. 28- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்
ஆக.30- சிபிஐ காவல் முடிந்த நிலையில் செப்டம்பர் 2-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் இருப்பதாக சிதம்பரம் கூறினார். இதையடுத்து அவரது காவல் செப்.2 வரை நீட்டிக்கப்பட்டது.
செப்.2- திகார் சிறையில் ப.சிதம்பரத்தை அடைக்க செப்.5-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
செப் 3- ப.சிதம்பரத்தை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டபோது ஜிடிபி 5 சதவீதம் குறித்து கிண்டல் செய்தார். இடைக்கால ஜாமீன் இல்லை என கூறிய சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 5-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டது.
செப்.5- ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சி.க்கும் மகன் கார்த்திக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் தர உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் தர மறுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் சிதம்பரம் அடைக்கப்படுகிறார்.