தட்கல் டிக்கெட் புக்கிங்.. ஆதார் எண் இணைக்கும் பணியை தொடங்கிய ஐஆர்சிடிசி
சென்னை: இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது. ஓடிபியை பதிவு செய்ததும் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படுகிறது. ஆதார் எண்ணில் இருப்பது போன்ற பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே ஆதார் எண் ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்கப்படுகிறது.
ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்டை பெறுவதற்கு பொதுமக்கள் ஐஆர்சிடிசி இணையதள கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பலர் போலி கணக்குகளை தொடங்கி டிக்கெட் பெறுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, கோடிக் கணக்கிலான போலி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குளை ரயில்வே நிர்வாகம் நீக்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து, ஆதார் ஓடிபி அடிப்படையில் மட்டுமே ஜூலை 1 முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று இந்திய ரயில்வே அறிவித்திருந்தது. இதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்களது ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ரயில்களில் புக்கிக் செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்ய தற்போது 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். பயணத்துக்கான ஒரு நாளுக்கு முன்னரும் தட்கலில் முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல, எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்ய ரயில் புறப்படும் முந்தைய நாள் காலை 10 மணிக்கு ஏசி பெட்டிகளுக்கான புக்கிங்கும், காலை 11 மணியளவில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான புக்கிங்கும் தொடங்கும். இந்த டிக்கெட் முன்பதிவில் முறைகேடுகள் நடைபெறுவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளை ஐஆர்சிடிசி பணிகள் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவுகளில் ஏற்படும் முறைகேடுகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. ஐஆர்சிடிசி இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைப்பது குறித்து பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தகவலளித்துள்ளது.
ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்டு அளித்து ஐஆர்சிடிசி முன்பதிவு இணையதளத்துக்குள் செல்ல வேண்டும். பின்னர், மை அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்து, ஆத்தென்டிகேட் யூசர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், ஆதார் அட்டையில் உள்ளதைப் போல பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும்.
அந்த ஓடிபியை கொடுத்தவுடன் ஐஆர்சிடிசி இணையதளத்துடன் ஆதார் இணைக்கப்படும். ஐஆர்சிடிசி பயனர்கள் முன்கூட்டியே தங்களது இணையதள கணக்குடன் ஆதாரை இணைத்து இறுதி நேர சிக்கலைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications