விண்வெளிக்கு போகுறது இருக்கட்டும்! முதலில் மணிப்பூருக்கு போங்க! மோடியை சீண்டிய ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: பிரதமர் மோடி விண்வெளிக்கு பயணிக்க வாய்ப்பு இருக்கிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருந்த நிலையில், விண்வெளிக்கு போவதற்கு முன்னர் மோடி மணிப்பூருக்கு போக வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இந்தியாவின் சார்பில் முதன்முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில், இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கான சோதனைகள் ஏறத்தாழ அனைத்தும் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்திய மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல விண்வெளிக்கு செல்லும் வீரர்களையும் கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா சார்பில் விண்வெளிக்கு பயணிப்பவர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருக்க வாய்ப்பிருக்கிறது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சோம்நாத் கூறியதாவது, "பிரதமர் மோடிக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அதில் முதன்மையானதாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் மிஷனை வெற்றிகரமாக முடிக்கும் பொறுப்பும் இருக்கிறது. ககன்யான் திட்டத்தின் மூலம் முதன் முதலில் மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படும் போது அவர்கள் ஒரு நாள் முழுவதுமாக விண்வெளியில் கழிப்பார்கள். இந்த நேரத்தில் பூமியை 16 முறை அவர்கள் சுற்றி வருவார்கள். இந்த பயணத்தின்போது பல்வேறு சோதனைகள் நடைபெற இருக்கிறது.
இந்த ஆண்டு ககன்யான் திட்டத்தில் நாம் ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். மூன்று முக்கியமான பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முதல் பணி, பூமியின் சுற்றுப்பாதையில் திட்டமிட்டபடி சுற்றி வருவது. இதற்காக ஆளில்லா விண்கலத்தை ஏவ இருக்கிறோம். இரண்டாவதாக விண்வெளி வீரர்களுக்கு தேவைப்படும் கருவிகள் குறித்த சோதனை. இறுதியாக, ஏவுதளத்தை சரிபார்த்தல்.
வரும் 2028ம் ஆண்டில் விண்வெளியில் இந்தியா தனக்கென சொந்தமாக ஆய்வு மையத்தை அமைக்கும். இந்த ஆய்வு மையம் 'பாரதிய அந்தரிஷ்' என்கிற பெயரில் அழைக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு பிரதமர் விண்வெளிக்கு பயணிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சோம்நாத், "ககன்யான் பயணத்தில் விண்வெளிக்கு செல்பவர்களில் பிரதமர் மோடியும் ஒருவராக இருக்கலாம்" என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் இதனை மேற்கோள்காட்டி, "பிரதமர் மோடி, விண்வெளிக்குச் செல்வதற்கு முன், மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக அம்மாநிலத்தில் இன்னும் இயல்பு நிலை முழுமையாக திரும்பவில்லை. இந்நிலையில் கடந்த 27ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றியபோது மணிப்பூர், மணிப்பூர் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியிருந்தனர். ஆனால், குடியரசுத் தலைவர் உரையில் மணிப்பூர் என்கிற வார்த்தை இடம்பெற்றிருக்கவில்லை.
இப்படி இருக்கையில்தான் பிரதமர் மோடி விண்வெளிக்கு போவதற்கு முன்னர் மணிப்பூருக்கு போக வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications