இப்படி கூட நடக்குமா?.. ஜார்கண்ட்டில் தடுப்பூசியால் குணமடைந்தாரா பக்கவாத நோயாளி..! உண்மைத்தன்மை என்ன?
டெல்லி: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன.
கொரோனா விஸ்வரூபம்! ஒரேநாளில் 23,459 பேருக்கு தொற்று! 9,026 பேர் டிஸ்சார்ஜ்! 26 பேர் உயிரிழப்பு!
உச்சத்தில் கொரோனா
ஓமிக்ரானை தடுக்கும் வகையில் இந்தியாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் காரணமாக கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தில் சென்று வருகிறது. தினமும் 1,50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
தடுப்பூசியின் அதிசயம்
கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். இதனால்தான் உலக நாடுகள் பூஸ்டர் டோஸ் முதற்கொண்டு வேகமாக போட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணிகள் மிக வேகமாக நடந்தும் வருகிறது. இந்த நிலையில் ஜார்க்கண்ட்டில் நடக்க முடியாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் தடுப்பூசி போட்ட பிறகு தன்னால் நடக்க முடிகிறது என்றும், பேச முடிகிறது என்றும் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
முடமான நபர் நடக்க ஆரம்பித்தார்
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள சல்காதி கிராமத்தைச் சேர்ந்த 55 வயதுடைய துலர்சந்த் முண்டா என்னும் நபர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்துக்கு பிறகு நடக்க முடியாமல் போனார். வாய் பேச முடியாமலும் போனார். நடக்க முடியாமல் அதாவது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். சக்கர நாற்காலியில் இருந்து வந்தார். கடந்த 4-ம் தேதி அவர் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். ''அதன்பிறகு என் குரல் மீண்டும் வந்தது, என் கால்களும் நகர்ந்தன'' என்று ஆச்சரியமாக கூறுகிறார் துலர்சந்த் முண்டா.
குணமானதை நம்பமுடியாது
துலர்சந்த் முண்டா கூறுவதை கேட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் வியந்து போனார்கள். இதுபற்றி டாக்டர் ஜிதேந்திர குமார் கூறுகையில், "இதைக் கண்டு வியப்படைந்தேன். இதுபற்றி விஞ்ஞானிகளால் கண்டறியப்பட வேண்டும். சில நாட்களுக்கு மேல் இல்லாத உடல்நிலையில் இருந்து அவர் குணமடைந்திருந்தால், இதனை நம்பலாம். ஆனால் நான்கு வருட மருத்துவ நிலையில் இருந்து வந்த அவர் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு குணமானதை நம்பமுடியாது'' என்றார்.
இது எப்படிசாத்தியம்?
துலர்சந்த் முண்டாவின் நோய் மற்றும்அவர் குணமானது குறித்து ஆராய்ச்சி நடத்தும் போது, துல்லியமான தகவல்களும் பதில்களும் வரும் நாட்களில் கிடைக்கும்" என்று பெட்டர்வார் சுகாதார மையத்தின் பொறுப்பாளர் அல்பெல் கெர்கெட்டா கூறினார். துலர்சந்த் முண்டாவின் குடும்பத்தினரின் கூறுகையில், 'விபத்துக்குப் பிறகு அவர் சிகிச்சை பெற்றார், ஆனால் அவரது உடல் உறுப்பு வேலை செய்யவில்லை. இதனால் அவரது குரலும் தளர ஆரம்பித்தது. 4 லட்சம் ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்தும் பலனில்லை. ஆனால் தற்போது அதிசயம் நடந்துள்ளது'' என்று கூறினர்.