தமிழில் பதவி பிரமாணம்.. வியந்து போன ராஜ்நாத்.. தோளில் கை போட்ட ராகுல் காந்தி.. விஜய் வசந்த் கலக்கல்
டெல்லி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் விஜய் வசந்த் முதல் நாளிலேயே டெல்லியில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
காங்கிரசின் மூத்த தலைவராகவும் கன்னியாகுமரி தொகுதியில் லோக்சபா எம்பி ஆகவும் இருந்த வசந்தகுமார், கொரோனா நோய் தாக்கம் காரணமாக கடந்த வருடம் மரணமடைந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வருடம் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற காலகட்டத்தில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது.

கன்னியாகுமரி தொகுதி
அதில், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனைவிட ஒரு லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியை பதிவு செய்தார். இருப்பினும் அவர் இதுவரை பதவி ஏற்றுக் கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற எம்பிக்கள் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். அதேபோன்று லோக்சபாவில் விஜய் வசந்த் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவர் தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டது பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.
|
தமிழில் பதவிப் பிரமாணம்
கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஹரிகிருஷ்ண பெருமாள் நாடார் வசந்தகுமாரின் மகனாகிய விஜயகுமார் என்கிற விஜய் வசந்த் என்னும் நான், சட்டப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ள இந்திய அரசமைப்பின்பால் உண்மையான நம்பிக்கையும், பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள உள்ள கடமையை நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் கடவுள் அறிய உறுதி கூறுகிறேன். பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ராஜீவ் காந்தி புகழ் வாழ்க. இவ்வாறு விஜய் வசந்த் பதவிப் பிரமாணம் செய்தார்.

வியந்து பார்த்த ராஜ்நாத் சிங்
விஜய் வசந்த் நின்று கொண்டே பதவியேற்றபோது பின்னால் அமர்ந்து இருந்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங். விஜய் வசந்த், காமராஜர் பெயரையும், ராஜீவ் காந்தி பெயரையும் கைகளை ஓங்கியபடி உச்சரித்தார். இதன்பிறகு, அங்கிருந்து விஜய் வசந்த் திரும்பும்போது, அவரையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தார் ராஜ்நாத் சிங். இதை வீடியோ காட்சிகளில் பார்க்க முடிகிறது.

ராகுல் காந்தியுடன் சந்திப்பு
அது மட்டும் கிடையாது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தியை பாராளுமன்ற வளாகத்தில் வைத்து விஜய் வசந்த் சந்தித்து இருக்கிறார். அப்போது தனது தந்தை எழுதிய புத்தகங்கள் உள்ளிட்ட சில விஷயங்களை அன்பளிப்பாக ராகுல்காந்திக்கு விஜய் வசந்த் அளித்தார். அப்போது விஜய் வசந்த் தோள் மீது ராகுல் காந்தி கை போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். "தலைவருடன் முதல் நாள் பாராளுமன்றத்தில்" என்று விஜய் வசந்த் இந்த புகைப்படத்துடன் ட்வீட் செய்து இருக்கிறார்.

சுறுசுறுப்பு
எம்பி என்ற வகையில் டெல்லிக்கு சென்ற முதல் நாளிலேயே பதவிப்பிரமாணம் முதல், தலைவர்களுடனான சந்திப்பு வரை என பரபரப்பாக இருக்கிறார் விஜய் வசந்த். மறைந்த வசந்தகுமார் மிகவும் சுறுசுறுப்பாக அறியப்பட்டவர். தான் நடத்தி வந்த தொழில்களில் மட்டுமில்லாது, அரசியலிலும் தேனீ போல மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட்டார். 70 வயது ஆகி இருந்தாலும் கூட வசந்தகுமாரின் பேச்சும் செயல்பாடுகளும் 40 வயதுக்கு உட்பட்ட ஒரு வாலிபரை போலத்தான் இருந்து வந்தது.

வசந்தகுமார் அரசியல்
காங்கிரஸ் கட்சியில் எந்த கோஷ்டிகளிலும் பெரிதாக சிக்கிக் கொள்ளாமல் அனைத்து தரப்பினரிடமும் நல்ல பெயர் வாங்கியவர் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சி மட்டும் கிடையாது, எந்த ஒரு பிற கட்சியைச் சேர்ந்த தலைவர்களாக இருந்தாலும் வசந்தகுமார் மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார்கள். இப்போது அந்த மிகப் பெரிய பொறுப்பை சுமந்து கொண்டு நிற்கிறார் விஜய் வசந்த்.

தந்தை வழியில் தனயன்
அனைத்து தரப்பினருடனும் இனிமையாகப் பழகக் கூடியவர் என்ற பெயரை தனது தந்தையை போலவே விஜய் வசந்தும் ஈட்டி வருகிறார். விஜய் வசந்தின் முதல் நாள் நாடாளுமன்ற நடவடிக்கைகள், அவர் தனது தந்தை வழியில் பயணிக்க தொடங்கி விட்டார் என்பதை காட்டும் வகையில் அமைந்து இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications