எர்டோகன் மூக்கை உடைத்த இந்தியா.. வாயை கொடுத்து வாங்கி கட்டிய துருக்கி! வெளியுறவுத்துறை பதிலடி
டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் தேவையின்றி தலையிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த துருக்கி நாட்டு அதிபர் ரெசேப் தையிப் எர்டோகனுக்கு நம் நாடு சுளீர் பதிலடி கொடுத்துள்ளது.
நமக்கு சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி வருகிறது. அதோடு நம்மிடம் இருக்கும் காஷ்மீரையும் அபகரிக்கும் வகையில் பயங்கரவாத செயல்களை பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடுகிறது. பாகிஸ்தானின் இந்த சதி செயல்களுக்கு நம் நாட்டு வீரர்கள் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்போது காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் என்பது பெருமளவு குறைந்துள்ளது.

இதற்கிடையே தான் பாகிஸ்தானை போல் நம் நாட்டுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நாடாக துருக்கி உள்ளது. காஷ்மீர் விவகாரத்தை எடுத்து கொண்டால் துருக்கி எப்போதும் நமக்கு ஆதரவாக இருக்காது. பாகிஸ்தான் பக்கம் தான் நிற்கும். இதனால் துருக்கி - பாகிஸ்தான் இடையே நல்ல உறவு உள்ளது.
இப்படியான சூழலில் தான் துருக்கி அதிபர் ரெசேப் தையிப் எர்டோகன் பாகிஸ்தானுக்கு விசிட் செய்தார். அங்கு அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பை சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு துறை சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது காஷ்மீர் விவகாரத்தில் அவர் மூக்கை நுழைத்தார்.
இதுபற்றி எர்டோகன் கருத்து தெரிவிக்கையில், ‛‛காஷ்மீர் பிரச்சனையை ஐநாவின் தீர்மானத்தின்படி பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். காஷ்மீர் மக்களின் விருப்பங்களை மனதில் வைத்து தீர்வு காண வேண்டும். நம்முடை நாடும், நாட்டு மக்களும் இதற்கு முன்பை போல் காஷ்மீர் இளைஞர்களுடன் நிற்கின்றன'' என்றார். அதாவது காஷ்மீர் பாகிஸ்தானுக்கு தான் சொந்தம். அதனை பேச்சுவார்த்தை மூலம் அந்த நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த விஷயத்தில் துருக்கி பாகிஸ்தான் பக்கம் தான் தொடர்ந்து நிற்கிறது என்பதை தான் அவர் கூறியிருந்தார்.
எர்டோகனின் இந்த கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதுபற்றி நம் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛ஜம்மு காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதியாகும். இதுபற்றி கருத்து தெரிவிக்க எந்த நாட்டுக்கும் உரிமையில்லை.
மற்றொரு நாட்டின் உள்விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு பதிலாக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் இந்தியாவுக்கு எதிரான எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானின் கொள்கையை ஏற்காமல் இருந்திருக்க வேண்டும். அதுதான் பொருத்தமாக இருந்திருக்கும். இந்தியாவுக்கு உட்பட்ட விஷயங்களில் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நாங்கள் நிராகரிக்கிறோம். இதுதொடர்பாக இந்தியாவுக்கான துருக்கி தூதரிடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்'' என்று சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications