நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் நிறைவேற்றப்படும் சட்டங்கள்.. தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாக தலைமை நீதிபதி என்.வி. ரமணா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த மறைந்த இடதுசாரித் தலைவர் ராமமூர்த்தியின் நாடாளுமன்ற விவாதங்களையும் தலைமை நீதிபதி என்.வி. ரமணா நினைவு கூர்ந்தார்.
நாடாளுமன்றத்தில் பெகாசஸ் ஒட்டு கேட்பு, விவசாய சட்டங்கள் ஆகியவை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதால் நாடாளுமன்ற இரு சபைகளும் முடங்கின.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் அமளிகளுக்கு நடுவே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணாவும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இதனால் சட்டங்களின் உள்நோக்கம் என்ன என்பது புரியாமல் போய்விடுகிறது. இப்படி விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றபப்டுவதை எதிர்த்து ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இந்த வழக்குகளில் சட்டங்கள் குறித்த தெளிவான புரிதல்கள் கிடைக்கவில்லை. தற்போது சட்டங்களை நிறைவேற்றுவதில் இடைவெளிகள் இருக்கின்றன. இப்படியான சூழலில் ஏன் சட்டங்கள் இயற்றப்படுகின்றன? என்பதும் தெரியவில்லை.
நாடாளுமன்றத்தின் முந்தைய விவாதங்கள் அறிவுப்பூர்வமாக இருந்தன. தொழிற்சாலை பிரச்சனைகள் தொடர்பான ஒரு சட்டம் கொண்டுவரப்பட்ட போது தமிழகத்தின் மார்க்சிஸ்ட் தலைவர் ராமமூர்த்தி விரிவான விவாதங்களை எடுத்து வைத்தது நன்றாக நினைவில் இருக்கிறது. நீதித்துறை சார்ந்தவர்கள் பொதுவிவாதங்களில் பங்கேற்பதும் அவசியமாகிறது. இவ்வாறு என்.வி. ரமணா கூறினார்.












Click it and Unblock the Notifications