பில்கிஸ் பானு கேஸ்:11 பேர் விடுதலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கை கோர்த்த இடதுசாரிகள்-மமதா கட்சி!
டெல்லி: குஜராத்தில் 2002-ம் ஆண்டு பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு அவரது குடும்பத்தினர் 14 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், அரசியலில் பரம வைரிகளான இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸும் இணைந்து அப்பீல் செய்துள்ளனர்.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் இந்து சாமியார்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் இந்து-முஸ்லிம் மத வன்முறை வெடித்தது. அப்போது குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தார்.

2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த கொடூர சம்பவங்களில் ஒன்றுதான் பில்கிஸ் பானு என்கிற கர்ப்பிணி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது. பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம், குடும்பத்தினர் படுகொலை வழக்கில் 2008-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த கொடூர குற்றச்செயல் புரிந்த 11 பேருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்த நிலையில் தங்களை சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி குற்றவாளிகள் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதனை கருத்திக் கொள்ள வேண்டும் என குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து 11 பேர் விடுதலை தொடர்பாக குழு ஒன்றை அமைத்தது.
இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். கோத்ரா சிறையில் இருந்து ஆகஸ்ட் 15-ந் தேதி 11 குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றவாளிகளுக்கு அளிக்க வரவேற்பும் தெரிவிக்கப்பட்ட ஆதரவு கருத்துகளும் கடும் சர்ச்சையாகின. இந்த 11 பேர் விடுதலைக்கு பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் சுபாஷினி அலி, ரேவதி லவுல், ரூப் ரேகா வர்மா ஆகியோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இவர்களில் சுபாஷினி அலி யார் தெரியுமா? மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் AIDWA எனப்படும் சிபிஎம்-ன் மகளிர் அமைப்பின் துணைத் தலைவர்தான் சுபாஷினி அலி. இதே போல இன்னொருவரும் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் மஹூவா மொய்த்ரா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மஹூவா மொய்த்ராவின் பேச்சுகள் நாடாளுமன்றத்தை அதிரவைத்து கொண்டிருக்கின்றன. மேற்கு வங்க அரசியலில் பரம வைரிகளாக இருப்பவை சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள். ஆனால் பில்கிஸ் பானு வழக்கில் கை கோர்த்து இரு கட்சிகளும் மேல்முறையீடு செய்திருப்பது அரசியல் அரங்கத்தில் ஹாட் டாப்பிக்.












Click it and Unblock the Notifications