விவசாயிகளை சந்திக்க அனுமதி மறுப்பதா? பஞ்சாயத்தை கூட்டிய ராகுல் காந்தி- பின்வாங்கிய மத்திய அரசு!
டெல்லி: நாடாளுமன்றத்தில் தம்மை சந்திக்க வந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை; விவசாயிகள் என்பதால் மத்திய அரசு அனுமதி தர மறுத்ததா? என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த கண்டனத்தைத் தொடர்ந்து அவரை சந்திக்க விவசாயிகளின் சங்கப் பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி கொடுத்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை நேற்றுத் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் மாநிலங்கள் மட்டும் அதிக நிதியைப் பெற்றிருந்தன. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்கள் கடும் கோபத்தில் உள்ளன. இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகள் தொடங்குவதற்கு முன்னதாக 'இந்தியா' கூட்டணியின் எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக திரண்டு மத்திய பட்ஜெட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு சென்ற இந்தியா கூட்டணி எம்பிக்கள் இருசபைகளிலும் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். இந்த பரபரப்புக்கு இடையே டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது, தம்மை சந்திக்க வந்த 7 விவசாய சங்கப் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்குள் மத்திய அரசின் பாதுகாப்பு பிரிவினர் அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்ட அடுத்த பஞ்சாயத்து ரெடியானது.
ஆனால் மத்திய அரசு இந்த சர்ச்சை தொடர விரும்பவில்லை. ராகுல் காந்தியை சந்திக்க விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு உடனே அனுமதி கொடுத்தது.

2020-21ம் ஆண்டு உலகையே உலுக்கும் வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது. மேலும் வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டம் இயற்றப்படும் எனவும் வாக்குறுதி தந்தது மத்திய அரசு. தற்போது வரை இந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இதனால் இன்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்த விவசாயிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் நாடாளுமன்றத்தில் வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டம் இயற்ற கோரி தனிநபர் மசோதாவை ராகுல் காந்தி தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.












Click it and Unblock the Notifications