காமராஜர் தெரியும்.. “காந்தி” குடும்பம் அல்லாத யாரெல்லாம் காங்கிரஸ் தலைவராகி உள்ளார்கள் தெரியுமா?
டெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி நடைபெற இருக்கும் சூழலில் காந்தி குடும்பத்தை சாராத 2 பேர் இதில் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் காந்தி குடும்பத்தை சாராது காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள் யார் என்ற பட்டியலை பார்ப்போம்.
தொடர் தோல்வியில் துவண்டு கிடக்கும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சிப்பூசல் வெடித்துள்ள நிலையில் காந்தி குடும்பத்தை சாராதவர் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.
ஐடி விங்கை வலுப்படுத்தும் விஜய் மக்கள் இயக்கம்! நாடாளுமன்றத் தேர்தலுக்கு குறி? பரபரக்கும் ரசிகர்கள்!
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கேரள மாநில காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சுதந்திரத்துக்கு பிறகு காந்தி குடும்பத்தை சாராத காங்கிரஸ் தலைவர்கள் பட்டியலை கீழே பார்ப்போம்.
போகராஜு பட்டாபி சித்தராமையா
சுதந்திரத்துக்கு பின்னர் கடந்த 1948 முதல் 1949 வரை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் போகராஜு பட்டாபி சித்தராமையா. சுதந்திர போராட்ட தியாகியான இவர், மருத்துவராகவும் பணிபுரிந்தார். மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் ஆளுநரும் இவர்தான். ஜவஹர்லால் நேருவின் ஆதரவுடன் காங்கிரஸின் தலைவராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.
புருசோத்தம் தாஸ் டாண்டன்
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியான புருசோத்தம் தாஸ் டாண்டன், 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் காந்தி என்று அழைக்கப்பட்ட இவர், 1961 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்று இருக்கிறார்.
யு.என்.தெபார்
கடந்த 1955 முதல் 1959 வரை 4 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர் உச்சரங்ராய் நவால்சங்கர் தெபார். இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட இவர், சவுராஷ்டிரா (குஜராத்) மாநிலத்திற்கு 1948 முதல் 1954 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக பதவி வகித்து உள்ளார்.
நீலம் சஞ்சீவன ரெட்டி
இந்திய விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்துக் கொண்ட நீலம் சஞ்சீவன ரெட்டி கடந்த 1960 முதல் 1963 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தவர். ஆந்திர பிரதேசத்தின் முதல் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட நீலம், லோக் சபா சபாநாயகராகவும், மத்திய அமைச்சராகவும், 1977 முதல் 1982 வரை இந்திய குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்தவர்.
காமராஜர்
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முன்னணி தலைவர்களில் ஒருவராகவும் மதிக்கப்படும் கர்மவீரர் காமராஜர் 1964 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராஜரை இன்றளவும் தமிழ்நாடு மக்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.
எஸ்.நிஜலிங்கப்பா
ஆந்திராவை சேர்ந்த நீலம் சஞ்சீவன ரெட்டி மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த காமராஜருக்கு பிறகு கடந்த 1968 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவரானவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவரே. அவர் பெயர் எஸ்.நிஜலிங்கப்பா. வழக்கறிஞரும் சுதந்திர போராட்ட வீரருமான இவர், கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார்.
பாபு ஜக்ஜீவன் ராம்
கடந்த 1970 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக சுதந்திர போராட்ட வீரர் பாபு ஜக்ஜீவன் ராம் பதவியேற்றார். பீகாரை சேர்ந்த இவர் தீண்டாமைக்கு எதிராகவும் பட்டியலின மக்களுக்காகவும் போராடியவர். எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தியை ஆதரித்த இவர், 1977 ஆம் அண்டு காங்கிரஸில் இருந்து விலகி ஜனதா கட்சியில் இணைந்தார். இந்தியாவின் துணை பிரதமராக 2 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
ஷங்கர் தயாள் சர்மா
கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தவர் ஷங்கர் தயாள் சர்மா. மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த இவர், மத்திய அமைச்சராகவும், இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகவும் பதவி வகித்து இருக்கிறார்.
தேவாங்கா பருவா
அசாம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகியான தேவாங்கா பருவா கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து இருக்கிறார். இவர் பதவி வகித்தது மிகவும் நெருக்கடியான காலகட்டம். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாடு முழுவதும் எமர்ஜென்சியை அமல்படுத்தி இருந்தார்.
பி.வி.நரசிம்மராவ்
பமுலபரதி வெங்கட நரசிம்மராவ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். வழக்கறிஞரான இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காலக்கட்டத்திலேயே (1991-1996) இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இந்திய பொருளாதார சீர்திருத்தம் இவரது காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.