கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வல்ல... 'அது' மட்டும் தான் ஒரே நம்பிக்கை... சத்யேந்திர ஜெயின் பேச்சு
டெல்லி: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வில்லை என்று தெரிவித்துள்ள டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், விரைவாக அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போலவே தலைநகர் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,534 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால், டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் இதை டெல்லி சுகாதார துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

ஊரடங்கு தீர்வில்லை
கொரோனா பரவல் காரணமாக மீண்டும் லாக்டவுன் அறிவிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறிய அவர், ஊரடங்கு என்பது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாது என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் எப்படிப் பரவும் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது என்று குறிப்பிட்ட அவர், 21 நாட்களை ஊரடங்கை அமல்படுத்தினால் கொரோனாவை அழித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாகவும் ஆனால் கொரோனா வைரசை அழிக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி மட்டுமே தீர்வு
மருத்துவ ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டிய சத்யேந்திர ஜெயின், கொரோனா வைரஸ் அல்லது உருமாறிய கொரோனா இங்கு தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு இருக்கும். எனவே, கொரோனாவுடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா வைரசை முழுவதுமாக அழிக்க முடியாது. எனவே விரைவாகப் பொதுமக்கள் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பொதுமக்களிடம் வேண்டுகோள்
பொதுமக்கள் முதலில் சில மாதங்கள் மட்டும் முறையாக மாஸ்க்குகளை அணிந்தார்கள் என்றும் அதன் பின்னர் மாஸ்க்குகளை அணிவதை நிறுத்திவிட்டனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். வைரஸ் எப்படி நடந்துகொள்ளும் என்று தெரியாததால் மாஸ்க்குகளை அணிவதன் மூலமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

தினசரி கொரோனா சோதனை
மேலும் கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான படுக்கைகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், கூடுதல் படுக்கைகளைச் சேர்க்கவும் தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தினசரி கொரோனா பரிசோதனை அளவையும் 90 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேர் வரை கண்டறிந்து பரிசோதனை செய்வதாகவும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications